தமிழக - கேரளா எல்லையில் ரூ. 16 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி
செங்கோட்டை: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 16 லட்ச ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதன்படி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுப்பதற்காக பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

வாகனச் சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பின்னர் உரிய ஆவணத்தை காட்டிய உடன் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக - கேரளா எல்லைப் பகுதியான புளியரைல் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சுப்பிரமணியன், காவல்துறை உதவி ஆய்வாளர் கோமதிநாயகம், காவலர்கள் பரமசிவன், ராமசாமி, சரவணபாபு உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 16 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நடத்திய விசாரணையில் அந்த பணம் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த தனியார் பீடி கம்பெனியின் வசூல் பணம் என்பது தெரிய வந்தது. இருப்பினும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications