திமுகவிற்கு ஓட்டு போடுவீங்களா? வாக்காளர்களிடம் சத்தியம் கேட்ட மு.க.ஸ்டாலின்
வத்தலக்குண்டு: திமுகவிற்கு நீங்க ஒட்டு போடுவீங்களா? நிச்சயமாக? சத்தியமாக என்று வாக்காளர்களிடம் வாக்குறுதி கேட்டார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தொகுதிக்குட்பட்ட வத்தலக்குண்டு பகுதிகளில் வாக்கு சேகரித்தார் ஸ்டாலின். வழக்கம் போல அதிமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டினார்.

ஹெலிகாப்டரில் பறந்துவந்து தக,தகவென ஓசையுடன் பறந்து மக்களை சந்திக்கும் தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியும். தேர்தல் நேரத்தில் தான் வருவார்.
2011 ல் ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா ஒரு முறையாவது உங்கள் மாவட்டத்துக்கு வந்தாரா? கோட்டைக்கு வராதவர் மக்களை எப்படி சந்திக்க வருவார் ?
நான் சொல்லாததையும் செய்தேன் என்று அண்ட புளுகு பேசுகிறார். 2011ல் தேர்தல் நேரத்தில் விவசாயிகள் தனிநபர் வருமானம் உயர்த்த சிறப்பு திட்டம் உருவாக்குவோம் என்றார். ஆனால் இது வரை அது நடக்கவில்லை. விவசாயிகள் கடன் சுமையால் பலர் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளை கொடுமைபடுத்தும் ஆட்சி நடக்கிறது என்றார்.
ஒவ்வொருவருக்கும் 20 லிட்டர் சுத்திகரிப்பு தண்ணீர் கொடுப்பேன் என்று சொன்னீர்களே ? முதியோருக்கு பஸ் பாஸ் கொடுப்பேன் என்று சொன்னீர்கள், செய்வீர்களா செய்வீர்களா என்று கேட்ட ஜெயலலிதாவை நான் கேட்கிறேன் செய்தீர்களா ? என்று கேள்வி எழுப்பினார் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் சொல்லாததையும் செய்வார்கள், பால் விலையை சொல்லாமலேயே உயர்த்தினார்கள், மின் கட்டணத்தை சொல்லாமலேயே உயர்த்தினார் என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால், பால், முட்டை விலையை குறைப்போம் என்று கூறினார்.
தற்போது ஒவ்வொருவர் தலையிலும் 41 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. வில்லியிடம் சிக்கி இருக்கும் தமிழகத்தை எங்களின் " கதாநாயகன் தேர்தல் அறிக்கை " மீட்கும் என்று கூறிய அவர், இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவீர்களா என்று கேட்டார்.
நிச்சயமாக.... என்று ஸ்டாலின் கேட்க வாக்காளர்கள் நிச்சயமாக என்று கூறினர். அதற்கடுத்து சத்தியமாக... சத்தியமாக.... என்று கேட்டார்.
வாக்காளர்களிடம் சத்தியம் கேட்டு ஸ்டாலின் வாக்கு சேகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது
நேற்றைய தினம் மதுரையில் பேசிய ஸ்டாலின், ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. கருணாநிதி மகன் என்ற முறையில் உங்கள் கால்களில் விழுந்து தி.மு.க.வுக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். இன்று வாக்காளர்களிடம் சத்தியம் கேட்டுள்ளார் ஸ்டாலின். இனி என்னென்ன கேட்பாரோ?












Click it and Unblock the Notifications