கரண்ட் வேணும்னா காசு கொடு.. சென்னை புற நகரில் மிரட்டி பணம் பறிக்கும் மின் வாரிய ஊழியர்கள்
மின்சார இணைப்பு சீர் செய்ய வேண்டுமானால் லஞ்சமாக பணம் கேட்கப்படுவதாக குமுறுகிறார்கள் சென்னை புற நகர் பகுதி மக்கள்.
சென்னை: வர்தா புயலுக்கு பிறகு, இன்னமும் மின்சார இணைப்பு சீர் செய்யப்படவில்லை என்பதால், சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆனால் அதிகார மையங்கள் கை காட்டும் பகுதிகளுக்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தி மின் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகர பகுதியில் மின்சாரம் அவ்வப்போது வந்து செல்கிறது. எனவே, மின்சாரம் வரும் நேரத்தில் மக்கள் மோட்டார்களை ஆன் செய்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி பிறகு வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், சென்னை புறநகர் மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சார சப்ளை தரப்படவில்லை.
குரோம்பேட்டை, பல்லாவரம் உட்பட தெற்கு சென்னையாகட்டும், வட சென்னையின் புறநகராகட்டும், நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் மந்த கதியில் நடக்கின்றன. சாலையில், மரங்கள் அகற்றப்படவில்லை, மின்சார கம்பங்கள் திரும்ப நடப்படவில்லை.
மின்சாரம் இல்லாததால் புற நகர் பகுதிகளில் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கான தண்ணீர் தட்டுப்பாடு பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், புற நகர் பகுதிகளின் ஒரு சில இடங்களில் மட்டும் மின் வினியோகம் செய்யப்படுவது ஆச்சரியம் அளித்துள்ளது.
இதுகுறித்து விசாரித்து பார்த்தபோது அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. லோக்கல் கவுன்சிலர் கை காட்டும் பகுதிகளுக்கு, குடியிருப்பு சங்கத்தினர் சேர்ந்து நெருக்கடி தரும் பகுதிகளுக்குத்தான் மின் வினியோகம் செய்யப்படுகிறதாம். விஐபிகள் ஏரியாக்களுக்கும் உடனே மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. மின்சாரம் விட்டு விட்டு வந்தாலும் கூட இப்பகுதிகளில் மட்டும் மின் இணைப்பு கொடுத்துவிட்டு அக்கம் பக்கத்து ஏரியாக்களை அம்போ என விட்டுள்ளது அரசு நிர்வாகம்.
இன்னொருபக்கம், மின்வாரிய ஊழியர்கள் சிலரின் வசூல் வேட்டையும் ஜோராக நடக்கிறது. பணம் கொடுத்தால் உடனே மின்சார இணைப்பை சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஊழியர்கள் சிலர் குடியிருப்பு சங்கங்களிடமும், அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடமும் பேரம் பேசிவருகிறார்கள். கையில் பணம் கொடுக்கப்பட்டதும், அங்கெல்லாம் மின்சார வினியோகம் சீரமைக்கப்படுகிறது.