ஈரோட்டில் காதல் மோதலில் சிக்கி ஆண் யானை பலியான பரிதாபம்
ஈரோடு: பெண் யானையோடு உறவு கொள்ள ஏற்பட்ட மோதலில் பலியான ஆண் யானையின் சடலம் ஒன்று ஈரோடு அருகே வனப் பகுதியில் கண்டெடுக்கப் பட்டது.
ஈரோடு வனமண்டலம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வடவள்ளி வனப்பகுதியில் சத்தியமங்கலம் ரேஞ்சர் சண்முகம் தலைமையில் ரோந்து சென்ற வனத்துறையினர் பார்வையில் ஆண் யானையின் சடலம் ஒன்று சிக்கியது.
சுமார் 15 வயது மதிக்கத்தக்க அந்த யானை நீண்ட தந்தங்களுடன் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மனோகரன், இறந்த யானையை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு, பெண் யானையிடம் உறவுக்கு செல்ல ஏற்பட்ட போட்டியில் இரண்டு ஆண் யானைகள் ஆக்ரோசமாக சண்டையிட்டதில் இந்த யானை இறந்ததாக தெரிய வந்துள்ளதாம்.
சென்னையில் இறந்த ஆண் புலி
இதேபோலத்தான் சென்னை வண்டலூர் விலங்கியல் பூங்காவில் இனப்பெருக்கத்திற்காக விடப்பட்ட ஒரு ஜோடி புலிகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டு அதில் ஆண் புலி உயிரிழந்தது நினைவிருக்கலாம்.