"ஃபுல்" மப்பில் தூங்கிய பாகனுக்கு பக்கத்திலேயே காவல் இருந்த யானை – திருச்சியில் பரபரப்பு
திருச்சி: திருச்சியில் குடி போதையில் தூங்கிய பாகனுக்கு, அவரது யானை காவலுக்கு நின்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமாக ஒரு யானை உள்ளது. இந்த யானையை திருவிழா மற்றும் விசேஷங்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார். யானையை கொள்ளிடக் கரையை சேர்ந்த சங்கர் என்பவர் பாகனாக இருந்து பராமரித்து வருகிறார் .

நேற்று இந்த யானை ஒரு விசேஷத்திற்கு சென்றது. விசேஷம் முடிந்த நிலையில் பாகன் சங்கர், யானையை அழைத்து கொண்டு ஸ்ரீரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சங்கர் அளவுக்கதிமாக மது அருந்தி இருந்தார். இதனால் அவரால் நடக்கமுடியவில்லை. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சத்திரம் அண்ணாசிலை பகுதியில் யானையுடன் சங்கர் தள்ளாடியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். யானை மிரண்டு ஓடினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் போதையில் பாகன் இருந்ததால் இதைக்கண்ட மக்கள் பீதி அடைந்தனர். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
அப்போது அப்பகுதியில் ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ ஆரோக்கியசாமி அங்கு சென்று யானைப் பாகன் சங்கரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் அவரோ, தனது பெயரைக் கூட உச்சரிக்க முடியாத அளவிற்கு பதில் கூற முடியாமல் அவருக்கு வாய் குளறியது. இவ்வளவு பிரச்சனையிலும் யானையானது அவரை விட்டு இம்மியளவு கூட நகராமல் கூடவே அமைதியாக நின்று கொண்டிருந்தது.
இதையடுத்து யானையை அப்பகுதியில் இருந்த திருமண மண்டபத்தில் கட்டி வைத்து உரிமையாளர் சேகருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். மாற்று பாகனுடன் வந்த உரிமையாளர் யானையை மீட்டு சென்றார்.
மேலும் உரிமையாளரிடம், யானையை பராமரிக்கும் பாகன் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து அறிவுரை வழங்க கோரினர். போதை தெளியாத பாகன் சங்கர், அங்கேயே படுத்து உறங்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications