பாரபட்சமாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்... தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
சென்னை: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது.....

கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசால் செய்ய முடியாததை மத்தியில் நரேந்திரமோடி அரசு ஒரு ஆண்டில் நிறைவேற்றி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அரசு கஜானாவை காலியாக்கி விட்டது.
மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வது இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக தான். இலவசங்கள் வழங்காமல் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கு தேவையான வளர்ச்சியை இந்த நாட்டிற்கு அவர் தந்து கொண்டிருக்கிறார்.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாடும் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
இவ்வளவு காலமும் திராவிட கட்சிகளுக்கு மக்கள் மாறி மாறி வாக்களித்து, ஏமாந்தது போதும். பா.ஜ.க. தலைமையில் ஒரு நல்லாட்சி தமிழகத்தில் அமைவதற்கு மக்கள் உதவ வேண்டும். பா.ஜ.க. வில் அதிகளவில் பெண்கள் இணைகிறார்கள். இலவசங்களை தந்து எத்தனை நாள் தான் நம்மை ஏமாற்றுவார்கள். தமிழகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இன்னும் 2 நாளில் ஆராய்ந்து முடிவை அறிவிப்போம். சமீபத்திய இடைத்தேர்தல்களை பார்த்தபோது அங்கு நிலவிய சூழ்நிலைகள் இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் விடைபெற்று கொள்ளலாம் என்ற உணர்வு தான் ஏற்பட்டது.
தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. நடுநிலை தவறிய தேர்தல் ஆணையத்தை வைத்து கொண்டு எப்படி தேர்தலை சந்திக்க முடியும் என்ற உணர்வு எல்லா கட்சிகளிடமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications