எண்ணூர் துறைமுகத்தை விற்பனை செய்வதை கைவிட பிரதமர் மோடிக்கு ஊழியர்கள் வேண்டுகோள்
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு துறைமுக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு துறைமுக ஊழியர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
எண்ணூர் துறைமுகமானது 2001-ம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இயங்கத் தொடங்கியது. இன்று சுமார் ரூ20,000 கோடி மதிப்பு கொண்டதாக இந்த துறைமுகம் வளர்ந்துள்ளது.
இத்துறைமுகத்தின் பங்குகளை முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் எண்ணூர் துறைமுகம் இப்போது லாபகரமாகவே இயங்கி வருகிறது.
அப்படி லாபகரமாக இயங்கும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்க வேண்டிய எந்த ஒரு தேவையுமே இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ1,000 கோடி வருவாய் ஈட்டித் தந்துள்ளது எண்ணூர் துறைமுகம்.
இந்த துறைமுகத்தில் 100 நேரடி ஊழியர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இத்துறைமுகத்தால் 15,000 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இவர்கள் நலன் கருதி நல்ல லாபத்தில் இயங்கும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு எண்ணூர் துறைமுக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.