மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று வேலை கொடுங்கள்… ராமதாஸ் வலியுறுத்தல்
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் அடுத்து தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட்டன. இதனால் அதில் பணியாற்றிய ஊழியர்கள் பணி இல்லாமல் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் பயனாக தமிழ்நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி செயல்பட்டு வந்த 3321 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கின்றன. இது மகிழ்ச்சியளிக்கும் அதே நேரத்தில் மதுக்கடைகளில் பணியாற்றி வந்த 15,000 பணியாளர்களுக்கு எந்தப் பணியும் வழங்காமல் காத்திருக்க வைத்திருக்கும் டாஸ்மாக்கின் செயல் வருத்தமளிக்கிறது.

நெருக்கடி
மூடப்பட்ட மதுக்கடைகளில் பணியாற்றியவர்களில் ஆளுங்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டும் பணிச்சுமை இல்லாத, வசதிகள் நிறைந்த மதுக்கடைகளில் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் வசதி இல்லாத, நெருக்கடி நிறைந்த மதுக்கடைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

பணியின்மை
150 சதுர அடி பரப்பளவுள்ள கடைகளில் மதுப்பெட்டிகளும், குளிரூட்டிகளும் வைக்கப்பட்டது போக மீதமுள்ள இடத்தில் 12 முதல் 15 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். நின்றாலே ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் சூழல் உள்ள கடைகளில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் ஒருபுறமிருக்க சுமார் 15,000 பணியாளர்கள் எந்த வேலையும் வழங்கப்படாமல் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

சந்தேகம்
எந்தப் பணியும் வழங்கப்படாததால் தாங்கள் பணி நீக்கம் செய்யப்படுவோமோ? என்ற சந்தேகம் டாஸ்மாக் பணியாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. அரசு மதுக்கடைகளில் பணியாற்றுவோருக்கு மிகமிக சொற்ப ஊதியமே வழங்கப்படுகிறது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் கூட அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மதுக்கடைகளில் பணியாற்றும் சுமார் 27,000 தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக அதே பணியில் உள்ளனர். அவர்களில் பலர் நாற்பது வயதைக் கடந்து விட்டவர்கள். அவர்களால் இனி வேறு பணிக்கு செல்வது சாத்தியமற்றது.

பழிவாங்கல்
தமிழ்நாட்டின் சீரழிவுக்கு மது தான் முக்கியக் காரணமாக உள்ளது. மதுவின் சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து போராடி வருகிறது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் தான் அவற்றை மூட வேண்டும் என்று கோரி பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறது. மாநில நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையை, மதுக்கடை பணியாளர்களை பழிவாங்குவதற்கான ஆயுதமாக தமிழக அரசு பயன்படுத்தக்கூடாது.

அரசுப் பணி
தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும். இதற்கான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டு வருகிறது. அத்தகைய இலக்கை நோக்கியப் பயணத்தின் இடையில் மதுக்கடைகள் மூடப்படும் போது, அவற்றில் பணியாற்றிய தொழிலாளர்களை அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுத்துறை பணியாளர்களாக நியமிப்பது தான் நியாயமான, நேர்மையான, பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.

காத்திருப்பு
கடந்த 2006ஆம் ஆண்டில், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படும்போது நியமித்துக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதினார். அதேபோல் இப்போதும் டாஸ்மாக் நிறுவனத்தின் உபரிப் பணியாளர்களாக காத்திருக்க வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களை அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப அரசுத் துறைகளில் நியமிக்கும்படி தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் பரிந்துரைக்க வேண்டும்.

உபரி இடங்கள்
அதனடிப்படையில் உபரிப் பணியாளர்களை அரசுத்துறை நிறுவனங்களில் நியமிக்க வேண்டும். தமிழக அரசுத் துறைகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் அரசுத்துறைகளில் பணிகள் பாதிக்கக்கப்பட்டிருக்கின்றன.

நியமனம்
டாஸ்மாக் உபரிப் பணியாளர்களை அரசுத்துறைகளில் நியமிப்பதன் மூலம் அரசின் தேவை மட்டுமின்றி தொழிலாளர்களின் தேவையையும் நிறைவேற்ற முடியும். எனவே, அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications