கருப்பு பணம் எங்கே? சென்னை, மதுரை அரசு அதிகாரிகளிடம் அமலாக்கப் பிரிவு அதிரடி ரெய்டு
சென்னை: கருப்புப் பணம் வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நாடு முழுவதும் 18 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்நிலையில் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும், ஆதரவுகளும் இருந்தன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் பணம் எடுப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்தனர். அச்சமயம் ஏராளமான கருப்பு பணம் துண்டுகளாக்கப்பட்டு சாலைகளில் கொட்டப்பட்டிருந்தது.
மேலும் பணமதிப்புழப்பு நிகழ்ந்து 4 மாதங்களாகியும் இன்னும் கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அரசு அதிகாரிகளிடம் லஞ்சமாக பெறப்படும் கருப்பு பணம் இருப்பதாக அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சென்னை, மதுரை உள்பட நாட்டின் 18 இடங்களில் உள்ள அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் மதுரையில் வங்கி அதிகாரி வீட்டிலும் அதிரடி சோதனை நிகழ்ந்தது.