வேளாண் அதிகாரிக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி நெருக்கடி கொடுத்தார்... பொறியாளர் வாக்குமூலம்!
சென்னை: முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்தது உண்மைதான் என்று கைதாகி உள்ள தலைமை பொறியாளர் செந்தில் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்த விவகாரத்தில் அப்போது அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று இந்த வழக்குத் தொடர்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுப் படி, அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் செந்திலும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமைப் பொறியாளர் செந்தில் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனு நெல்லை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிற்து.
இந்நிலையில், ‘தற்கொலை செய்து கொண்ட வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமிக்கு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நெருக்கடி கொடுத்தது உண்மைதான். அக்ரி கிருஷ்ணமூர்த்தி சொன்னதையெல்லாம் நான் செய்தேன்' என்றும் பொறியாளர் செந்தில் போலீசில் வாக்குமூலம் அளித்திருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
செந்திலின் வாக்குமூலத்தை போலீசார் எழுத்திலும் வீடியோவிலும் பதிவு செய்துள்ளனர். அந்த வாக்குமூலம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் செந்தில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையின் தலைமைப் பொறியாளராக நான் இருந்து வருகிறேன். எனது பணியில் எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல் பணியாற்றி வந்துள்ளேன்.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் வேளாண் பொறியியல் துறையில் 119 டிரைவர் காலி பணி இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக நான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியலை தயார் செய்தேன்.
ஆனால் அப்போது வேளாண் துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ண மூர்த்தி 119 காலி பணி இடங்களுக்கும் ஒரு இடத்துக்கு தலா ரூ.1.75 லட்சம் தனக்கு வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர் சொன்னதை எங்களால் மீற முடியவில்லை. எனவே இது பற்றி நான் தமிழ்நாடு முழுவதும் எல்லா மாவட்ட வேளாண் உதவிப் பொறியாளர்களை தொடர்பு கொண்டு ஒவ்வொரு காலி பணி இடத்துக்கும் தலா ரூ.1.75 லட்சம் தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டேன். அப்போது நெல்லை வேளாண் துறையில் மட்டும் பிரச்சனை ஏற்பட்டது.
நெல்லை மாவட்ட வேளாண் பொறியியல் துறையில் காலியாக இருந்த 7 டிரைவர் பணி இடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் 7 பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர் என்றும் அந்த தேர்வுக்கு நெல்லை மாவட்ட கலெக்டரும் ஒப்புதல் கொடுத்து விட்டார் என்றும் உதவிப்பொறியாளர் முத்துக்குமாரசாமி கூறினார்.
உடனே நான் முத்துக்குமாரசாமியிடம், ‘‘அமைச்சர் பணம் கேட்டிருக்கிறார். நீங்கள் செய்துள்ளதை கேள்விப்பட்டால் அவரது கோபத்துக்கு நீங்கள் ஆளாக வேண்டியதிருக்கும் பேசாமல் பணம் வசூல் செய்து கொடுத்து விடுங்கள்'' என்று எச்சரித்தேன்.
இதற்கிடையே சென்னையில் வேளாண் துறை பொறியாளர்கள் கூட்டம் ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னைக்கு வரும் போது அமைச்சர் கேட்ட பணத்துடன் வாருங்கள் என்று நான் முத்துக்குமாரசாமியிடம் கூறினேன். ஆனால் அவர் பணம் எதுவும் கொண்டு வரவில்லை.
‘‘அமைச்சர் கேட்ட பணத்தை ஏன் கொண்டு வரவில்லை'' என்று முத்துக்குமாரசாமியிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், ‘‘கலெக்டர் ஒப்புதல் கொடுத்து பணி நியமனமும் முடிந்து விட்டது'' என்றார். இது பற்றி நாங்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
அதற்கு அவர், ‘‘பரவாயில்லை. பணி நியமனம் உத்தரவு பெற்றுள்ள 7 பேரிடமும் தலா ரூ.1.75 லட்சம் வசூல் செய்து தாருங்கள்'' என்று கேட்டுக்கொண்டார். இந்த தகவலை நாங்கள் முத்துக்குமாரசாமியிடம் கூறினோம். ஆனால் அதன் பிறகும் அவர் பணம் வசூல் செய்து தரவில்லை.
இதற்கிடையே அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டதால் நானே முத்துக்குமாரசாமியிடம் 3 தடவை செல்போனில் பேசினேன். எந்த வகையிலாவது பணத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று கூறினேன்.
இந்த நிலையில் பிப்ரவரி 20-ந்தேதி முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக நெல்லை மாவட்ட வேளாண் பொறியியல் துறை கூடுதல் உதவிப்பொறியாளர் வெள்ளையா எனக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதை கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
முத்துக்குமாரசாமி குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்து வேளாண் துறையினரை அவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். முத்துக்குமாரசாமியின் வாரிசுகளில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வாங்கிக்கொடுக்கலாம் என்று மனு எழுதி வாங்கி வருமாறு கூறினேன்.
ஆனால் முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் நாங்கள் வறுமையில் வாடவில்லை. எனவே வேலை வேண்டாம் என்று கூறி மனு எழுதிதர மறுத்து விட்டனர்.
முத்துக்குமாரசாமியை நான் ஒரு போதும் மிரட்டவில்லை. அமைச்சர் சொன்னதைத்தான் செய்தேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அக்ரி கிருஷ்ண மூர்த்தி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் ‘‘நான் யாரிடமும் லஞ்சம் வாங்க சொல்லவில்லை. யாரையும் மிரட்டவும் இல்லை. முத்துக்குமாரசாமியிடம் நான் பேசியது கூட இல்லை. எனவே இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications