47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எண்ணூர் அனல் மின்நிலையம் மூடல் !!
தமிழகத்தின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றான எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுகிறது.
சென்னை: 47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கிய அனல் மின் நிலையங்களில், சென்னையை அடுத்த எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையம் முக்கியமான ஒன்றாகும். இந்த அனல் மின்நிலையம் 1970 ஆண்டு துவங்கப்பட்டது. இந்த அனல் மின்நிலையத்தை, தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம் நிர்வகித்து வருகின்றது.
தற்போது அனல் நிலையத்தில், 1,070 நிரந்தர தொழிலாளர்கள், சுமார் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இங்குள்ள 5 அலகுகள் மூலம் சுமார் 450 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது. பழைய அலகுகள் அருகிலேயே, 660 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் ரூ.3.960 கோடி மதிப்பீட்டில் புதிய அனல் மின் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த கட்டுமானப் பணிகளை லான்கோ என்ற நிறுவனம் செய்து வருகின்றது. எண்ணூர் அனல் மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால், மின் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, எண்ணணூர் அனல் மின் நிலையத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மூடுவதற்கு தமிழ்நாடு மின்னுற்பத்திக் கழகம் (TANGEDCO)முடிவெடுத்துள்ளது. அதன்படி அனல் மின்நிலையத்தில் உள்ள 5 அலகுகளில், ஐந்தாவது அலகு ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு அலகுகளையும் மூடுவதற்கான முடிவை மின்னுற்பத்திக் கழகம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணியோடு மின் உற்பத்தி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து எண்ணூர் அனல் மின் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அனல் மின் நிலையத்தின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இங்கு பணியில் உள்ள ஊழியர்கள், பொறியாளர்களின் நிலைமை கேள்விக்குறியாக உள்ளது.