சென்னை: கேரம் விளையாட்டில் தகராறு- இளைஞரை குத்திக் கொன்ற நண்பர்
சென்னை: சென்னையில் கேரம் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் நண்பரால் இளைஞர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த எண்ணூர் கமலம்மாள் நகரைச் சேர்ந்தவர் ரத்தினம் (21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலா (20) என்ற நண்பருடன் திங்களன்று இரவு கேரம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது.

பாலாவுக்கு ஆதரவாக காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த விமல் மற்றும் சிலரும்,, ரத்தினத்திற்கு ஆதரவாக அவரது தம்பி முனியாண்டி, பிரபாகர் மற்றும் சிலரும் வந்துள்ளனர். இருதரப்பைச் சேர்ந்தவர்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அப்போது பாலாவுக்கு ஆதரவாக வந்த விமலின் வயிற்றில் ரத்தினம் கத்தியால் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார், முனியாண்டி, பிரபாகர் ஆகியோரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரத்தினத்தைத் தேடி வருகின்றனர்.
கேரம் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறால் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications