சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட், பாமக வலியுறுத்தல்

இது தொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
முறையான பிரயாண ஆவணங்களும், நிச்சயிக்கப்பட்ட வேலையும் இல்லாமல் சவுதி அரேபியாவில் குடியிருக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை, அவரவர்களின் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பிட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உள்ளூர் அரேபிய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க மேற்படி நடவடிக்கையில் இறங்கிய சவுதி அரசு ஏழு மாதங்களுக்கு முன்னர் தனது ‘நிதாகத் சட்டம் ' மூலம் முறையான ஆவணங்களின்றிப் பணிபுரிவோரைத் திருப்பி அனுப்ப முடிவு செய்து கால அவகாசம் அளித்தது.
கால அவகாசம் முடிந்துள்ள நிலையில் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் உட்பட சுமார் 10 லட்சம் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். அதில் சுமார் 20,000த்துக்கும் மேற்பட்ட தமிழர்களும் அடங்குவர்.
உள்நாட்டில் வேலையில்லாத காரணத்தினால் பிழைப்புத் தேடி, ஏஜெண்டுகளுக்கு பல லட்சம் ரூபாய் கொடுத்து அங்கு சென்றுள்ள அப்பாவித் தமிழர்கள், தற்போது வேலையும், குடியுரிமையும், குடியிருக்க இடமும் இல்லாமல் சவுதி அரேபியாவில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவுக்குத் திரும்பி வர பயணச் செலவு கூட செய்ய முடியாமல் நிர்க்கதியாக நின்று தவித்துக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களை உடனடியாகத் தாயகம் திருப்பிக் கொண்டு வர மத்திய அரசும், மாநில அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
ராமதாஸ் கோரிக்கை
இதேபோல் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதி அரேபியாவில் இருந்து ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 281 பேர் தாயகம் திரும்பி உள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் இந்தியர்களின் வேலைவாய்ப்பு நிலைமை என்ன? என்பது தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனை உணர்ந்த கேரள அரசு, வெளிநாடு வாழ் மலையாளிகள் விவகாரத்துறை மூலம் சவுதி அரேபியாவுக்கு ஆலோசனை குழுக்களை அனுப்பி, உரிய ஆவணங்கள் இல்லாமல் தவிக்கும் மலையாளிகளை மீட்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோன்று, அங்கு தவிக்கும் தமிழர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications