எதிர்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? - எடப்பாடி ஆவேசம்!
தூத்துக்குடி: எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே கொல்லம்பரம்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்து பாலகிருஷ்ணன். அதிமுகவைச் சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ஆவார். முத்து பாலகிருஷ்ணன், அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி முத்து பாலகிருஷ்ணன் தனது பைக்கில் வெளியே சென்றுள்ளார். சந்திரகிரி அருகே, சென்ற போது கல்குவாரியில் கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி திடீரென முத்து பாலகிருஷ்ணன் மீது நேருக்கு நேராக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி முத்து பாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் டிரைவர் சௌந்தரராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த முத்து பாலகிருஷ்ணன் சடலத்தை வாங்க மறுத்து, உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்குவாரிக்கு 650 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்த விவகாரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் முன்விரோதம் போன்ற காரணங்களுக்காக முத்து பாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த திமுகவை சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கருணாகரன் இடையே மோதல் போக்கு நிலவி வந்துள்ளது.
முத்து பாலகிருஷ்ணனை லாரியை ஏற்றிக் கொலை செய்து விடுவேன் என்று தற்போதைய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கருணாகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்ததாகவும், அதன்படி அவர் கொலை செய்துவிட்டதாகவும் முத்து பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
எனவே தற்போதைய பஞ்சாயத்து தலைவரின் கணவர் கருணாகரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்ன செய்திகள் வருகின்றன. இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா?
திமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?
சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications