வரலாறு முக்கியம் முதல்வரே.. மேட்டூர் அணையை தூர்வாரப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி!
மேட்டூர் அணையை தூர்வாரும் பணியை நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைக்கிறார்.
சேலம்: மேட்டூர் அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை அணையை தூர்வாரும் பணியை தொடக்கி வைக்க உள்ளார்.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. மேட்டூர் அணை பாசனம் மூலம் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தற்போது கோவில் குளங்களை தூர்வாரி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணைகள் தூர்வாரப்படும் என்று கூறினார். பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த அணையை தூர்வாருவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கப் போகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

மேட்டூர் அணை
கடந்த 83 ஆண்டுகளில் இதுவரை மேட்டூர் அணையில் தூர்வாரப்படவில்லை. வெள்ளப்பெருக்கு மற்றும் மழைக் காரணமாக சுமார் 20 சதவிகித அளவுக்கு தூர்படித்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தூர் காரணமாக மேட்டூர் அணையில் முழுக் கொள்ளளவில் தண்ணீரைச் சேமிக்க முடியவில்லை.

கடும் வறட்சி
கடந்த ஆண்டு கடுமையான வறட்சி காரணமாக அணை முற்றிலும் வறண்டு விட்டது. அணையில் தற்போது 20 அடி தண்ணீர் இருந்தாலும் எல்லாமே சகதிதான். எனவேதான் இந்த ஆண்டாவது அணையை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அணை தூர்வாரப்படும் என்று தெரிவித்தார்.

தண்ணீர் வரத்து
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆண்டு கோடை மழை பரவலாக பெய்தது. இந்த மழை காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், பெய்து வந்தது. கடந்த வாரம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பரப்பான செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி போன்ற பகுதிகளில் வறண்டு கிடந்த காவிரி ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு நின்றதால், அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. அணை நீர்மட்டம் தற்போது 20 அடியாக உள்ளது. எனினும் சேரும், சகதியுமாக நிரம்பியுள்ளது. இதனால் அணையை தூர்வார முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் நீர் தேக்கம்
முதல்கட்டமாக, சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையின் வலதுகரையில் பண்ணவாடி, மூலக்காடு பகுதிகளிலும் இடதுகரையில் கூணாண்டியூர், கீரைக்காரனூர் பகுதிகளிலும் தர்மபுரி மாவட்டம், நாகமரை கிராமத்தில் ஆசாரி கிணற்றுப் பள்ளம், சித்தையன்கோயில் ஏரிப் பகுதிகளிலும் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதி
அணையில் இருந்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 டிராக்டரும், மண்பாண்டம் செய்வோருக்கு 20 டிராக்டரும், கிராவல் மண் நபருக்கு 10 டிராக்டரும் அள்ளிக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை ஞாயிறன்று தூர்வாரும் பணியை தொடக்கி வைக்கிறார். பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்த மேட்டூர் அணையை தூர்வாருவதன் மூலம் வரலாற்றில் இடம்பிடிக்கப் போகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எத்தனையோ முதல்வர்கள் தமிழகத்தை ஆண்டிருந்தாலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பின்னர் அணை தூர்வாரும் நிலை ஏற்பட்டுள்ளது.

அணை நிறையுமா?
இத்தனை ஆண்டுகாலம் கோடையிலும் 50 அடிக்கு குறையாமல் அணையில் தண்ணீர் இருக்கும். இந்த ஆண்டுதான் அணை முற்றிலும் வறண்டு விட்டது. அணை தூர்வாரப்படுவதன் மூலம் இந்த ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications