அமைச்சர்களுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை... சசிகலாவை நீக்க ஆயத்தம்?
அமைச்சர்களுடன் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை: பொதுக் குழு கூட்டுவது உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் இன்று முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
கடும் இன்னல்களுக்கு மத்தியில் கடந்த திங்கள்கிழமை அன்று அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸுக்கு துணை முதல்வர் பதவியும், முக்கிய சில இலாக்காகளும் ஒதுக்கப்பட்டன. அதேபோல் அவரது அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜனுக்கும் அமைச்சர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., பொதுக் குழுவை கூட்டி சசிகலாவும் நீக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார். இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடும் எதிர்பபு தெரிவித்தனர்.
மேலும் முதல்வருக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை திரும்ப பெறுவதாக 18 எம்எல்ஏ-க்கள் ஆளுநரை வெள்ளிக்கிழமை சந்தித்து தனித்தனியே கடிதங்களை கொடுத்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர்கள் அனைவரும் சென்னையிலேயே தங்க வேண்டும் என்று முதல்வர் நேற்று உத்தரவிட்டுள்ளனர். இன்று அமைச்சர்களுடன் முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனை நடத்தவுள்ளனர். பொதுக் குழுவைக் கூட்டுவது, இரட்டை இலை சின்னத்தை மீட்பது உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications