சிறுமியை பலாக்காரம் செய்த பூசாரி உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு: ஈரோட்டில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பூசாரி உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி முத்துபாவா. இவரது நண்பர் ஆந்திரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் வாசிம் அக்ரம். கடன் தொல்லையால் அவதிப்படும் தனது உறவினருக்காக மாந்திரிக பூஜை செய்ய கடந்த 2014இல் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த பூசாரி சரவணன் என்பவரை முத்துபாவா ஈரோட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, சரவணன், முத்துபாவா வீட்டில் தங்கி மாந்திரிக பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, முத்துபாவா உறவினரான 17 வயதுச் சிறுமிக்கும், சரவணனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சரவணன், முத்துபாவா, வாசிம் அக்ரம் ஆகியோர் துணையுடன் அவரை புதுக்கோட்டைக்கும் பின் ஆந்திரத்துக்கும் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இந்நிலையில், தன் மகள் கடத்தப்பட்டது குறித்து அச்சிறுமியின் தந்தை, ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆந்திர மாநிலம் சென்று சிறுமியை மீட்டதோடு, சரவணன், முத்துபாவா, வாசிம் அக்ரம் ஆகியோரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், முத்துபாவா, வாசிம் அக்ரம் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையுடன் தலா ரூபாய் 1,000 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications