தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் அதிமுக அரசு ஊழல்... ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார் -இளங்கோவன்!
திருவள்ளூர்: தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் அதிமுக அரசு பல கோடி ரூபாய் ஊழல் புரிந்திருப்பதாகவும், அதனை ஆதாரத்துடன் தன்னால் நிரூபிக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
கடந்த சில நாட்களாகவே தான் பங்கு பெறும் கூட்டங்களில் எல்லாம், தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் அதிமுக அரசு ஊழல் புரிந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
அந்தவகையில், திருவள்ளூரில் அம்மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் இளங்கோவன்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை முடங்கி கிடந்தது. தற்போது நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். தற்போது 1967-க்கு முன் காமராஜர் இருந்த காங்கிரசாக மாற்றி உள்ளோம். இந்த ஒரு மாதத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்த கோஷ்டி பூசல் ஒழிந்து விட்டது. கடந்த ஒரு மாதத்தில் நடந்த கூட்டத்தில் வேட்டி, சட்டை கிழியாததே அதற்கு சான்று.
லஞ்ச ஊழல் பேர்வழிகளிடம் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும். மற்ற கட்சிகளை போல தொண்டர்களை பலி கொடுத்து இயங்கும் கட்சி அல்ல இது. தங்களது உயிரை நீத்து தமிழர்களை நல்லபடியாக வாழ செய்யும் கட்சிதான் காங்கிரஸ். அயோக்கியர்களை வீட்டுக்கு அனுப்ப நாம் ஒன்று சேர்ந்துள்ளோம்.
லஞ்ச லாவண்யம் செய்து, சிறைக்கு சென்றவர்களுக்கு கோயில்கள்தோறும் பாலாபிஷேகம், யாகம், மீசை எடுக்க 500, மொட்டை அடிக்க 1000, பாலாபிஷேகத்திற்கு 5000, யாகத்திற்கு 10,000, மண் சோறு சாப்பிட 15,000, மாரடைப்பால் இறந்தால் 2 லட்சம்.
காந்தி இறந்தபோது கூட யாருக்கும் ‘ஹார்ட் அட்டாக்‘ வரவில்லை. ஆனால் ஜெயலலிதா சிறைக்கு சென்றதால் 206 பேருக்கு ‘ஹார்ட் அட்டாக்‘. இது சந்தோசத்திலும் வரும். இதுபோன்ற அநியாயம் நாட்டில் நடக்கிறது.
சில்லரை விலையில், ரூ.3.50க்கு விற்கப்படும் முட்டை, மொத்த விலையில் ரூ.5க்கு வாங்குகின்றனர். ரூ.3.50க்கு விற்கப்படும் யூனிட் மின்சாரம், ரூ.12.50க்கு வாங்குகின்றனர். இதில் முறைகேடு ஏற்பட்டு உள்ளது.
முடிந்தால் வழக்கு போடுங்கள். நான் நிரூபிக்க தயார். இது யாருடைய பணம். நம் வீட்டு வரிப்பணம். காங்கிரஸ் போராட்டத்துக்கு அஞ்சாது. இந்த லஞ்ச ஊழல்களை மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் மூலம் நாம் கிளப்புவோம்.
2016ல் காமராஜர் ஆட்சி மீண்டும் அமையும். இல்லையேல், காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, டாக்டர் செல்லகுமார், கே.ஜெயக்குமார், ஜெ.எம்.ஆருண், வி.ஆர்.பகவான், டி.யசோதா, டி.எல்.சதா சிவலிங்கம், தணிகைமணி, கொப்பூர் விஜயகுமார், கீழானூர் ராஜேந்திரன், பொன் கிருஷ்ணமூர்த்தி, நாசே ராமச்சந்திரன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.