ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திடீர் டெல்லி பயணம்.. காங்கிரஸ் மேலிடத்திடம் ஆலோசிக்க உள்ளதாக தகவல்
சென்னை : தனக்கு எதிரான அ.தி.மு.க. வினர் போராட்டம், காமராஜர் அரங்கத்தின் பெண் ஊழியர் கொடுத்த முறைகேடு புகார் உள்ளிட்ட விவகாரங்கள் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் கொந்தளித்துள்ள அ.தி.மு.க. வினர் மற்றும் பா.ஜ.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என்று அ.தி.மு.க. வினர் வலியுறுத்தி அவரது உருவ பொம்மைகளையும் எரித்து வருகின்றனர்.
இதனிடையே, காமராஜர் அரங்க பெண் ஊழியர் ஒருவரால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மற்றுமொரு சிக்கல் எழுந்துள்ளது. அங்கு
பணியாற்றிய வளர்மதி என்பவர் இளங்கோவன் மீது முறைகேடு புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
ஆனால் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி வைத்தியநாதன் மறுத்து விட்டார். இதனை அடுத்து இளங்கோவன் தரப்பினர் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இன்று மதியம் நீதிபதி வைத்தியநாதன் முன்பு இளங்கோவனின் முன் ஜாமின் மனு அவசரமாக விசாரிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார். அப்போது, விசாரணை முடியும் வரை கைது நடவடிக்கைக்கு தடை விதிக்குமாறு, இளங்கோவன் தரப்பில் கோரிக்கை விடுவிக்கப்பட்டது.
ஆனால், இதனை நிராகரித்த நீதிபதி வைத்தியநாதன், கைதுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டார்.
இந்த சூழலில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (21-08-2015) மாலை திடீரென விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications