சோனியாவை விமர்சித்த ஹெச். ராஜாவின் கொடும்பாவியை எரியுங்கள் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
சோனியா காந்தியை விமர்சித்த ஹெச். ராஜாவின் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் எரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்துகொண்டிருக்கும் சோனியா காந்தியை அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சிப்பதா என்று ஹெச்.ராஜாவை ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக கண்டித்துள்ளார். காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்டத் தலைநகரங்களில் அவரின் கொடும்பாவியை எரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஹெச். ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. ஹெச்.ராஜாவின் உருவப் பொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய மகளிர் காங்கிரசார், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
ஹெச். ராஜாவிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில்,
தன்னுடைய மாமியார் தீவிரவாத பிரச்னைகளால் கொல்லப்பட்டபோதும், கணவர் தீவிரவாத சக்திகளால் கொல்லப்பட்டபோதும் நாட்டிற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்துகொண்டிருக்கும் சோனியா காந்தியை அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சித்த ஹெச்.ராஜாவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவரின் பேச்சை கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் மாவட்டத் தலைநகரங்களில் அவரின் கொடும்பாவியை எரிப்பார்கள். இனியும் தொடர்ந்து இது போன்று பேசினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.