தமிழ் இசை பாட பெயர் சூட்டினால் தமிழ் வசை பாடுகிறாரே: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
நாகை: பாஜக தலைவர் தமிழ் இசை பாட வேண்டும் என்று பெயர் வைத்தால் அவர் தமிழ் வசை பாடிக் கொண்டிருக்கிறாரே என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மாநாடு
வரும் 23ம் தேதி திருச்சியில் காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். அடுத்த ஆண்டு நடக்க உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த மாநாடு அமையும்.
மோடி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. மோடி அரசு கடந்த 11 மாதங்களில் என்னென்ன நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது? மோடி வெளிநாடுகளுக்கு செல்லும் செய்தியை விட்டுவிட்டு இந்தியாவில் தங்கும் நாட்கள் பற்றிய விவரங்களை தெரிவித்தால் நல்லது.
தமிழிசை
பாஜக தலைவர் தமிழ் இசை பாட வேண்டும் என்று நினைத்து பெயர் வைத்தார்கள். ஆனால் அவரோ தமிழ் வசை பாடுபவராக உள்ளார்.
காமராஜர் ஆட்சி
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காமராஜர் ஆட்சியை அளிப்போம் என்கிறது சில கட்சிகள். இதன் மூலம் கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது நன்றாகத் தெரிகிறது.
மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாஜகவினர் மவுன சாமியார் என்று கிண்டல் செய்தார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த உடனே விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்பட்டது, வாட் வரி ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் தான் மாணவர்களுக்கு வங்கிகள் கட்டாயமாக கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
காங்கிரஸ்
ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்தக் கோருகிறது பாஜக. நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் அது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும் என்றார் இளங்கோவன்.