விஜயதாரணி மீது கோபமில்லை... சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக நீடிப்பார்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விஜயதாரணி விடுவிக்கப்பட்டாலும் சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக நீடிப்பார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விஜயதரணி நீக்கப்பட்டது கட்சி மேலிடத்தின் முடிவு என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்த விஜயதரணி எம்.எல்.ஏ வை அதிரடியாக நீக்கிய ராகுல்காந்தி புதிய மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஜான்சிராணியை நியமித்தார். இவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.எஸ்.பொன்னம்மாளின் பேத்தியாவார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட விஜயதரணி எம்.எல்.ஏ. காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது குற்றம் சாட்டினார். அவர் தலைவர் பதவியில் இருக்கும் வரை காங்கிரஸ் வெற்றி பெறாது. அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்சி மேலிடம் தன் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
இதுபற்றி கருத்து கூறியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், என்னைப் பொறுத்தவரை விஜயதரணி மீது எந்தக் கோபமோ,காழ்ப்புணர்ச்சியோ கிடையாது.அவர் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுவார் இதில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றார்.
நடந்தது நடந்ததாக இருக்கட்டும். அவரது கருத்துக்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் சட்டசபை காங்கிரஸ் கொறடாவாக நீடிப்பார்.
ஜான்சி ராணி அவர்கள்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த பொன்னாம்மாள் அவர்களுடைய பேத்தி,அது மட்டுமல்லாது தலித் வகுப்பை சார்ந்தவர்,படித்தவர், இளம்பெண், தமிழகத்தில் தேர்தல் வரும் நேரத்தில் அவரை தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராக நியமித்திருப்பது மிக பொறுத்தமான செயல், இதை நான் வரவேற்கிறேன்.அவருக்கு காங்கிரஸ் கட்சி அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கும் என்று கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், விஜயதரணி காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக இருப்பார், அவரையும் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications