ஆளே கிடைக்கலை.... வேறவழியே இல்லை... மீண்டும் தமிழக காங். தலைவராகும் ஈவிகேஎஸ் இளங்கோவன்?
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மீண்டும் ஈவிகேஎஸ் இளங்கோவனையே நியமிப்பது குறித்து தற்போது காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. இதற்காக இளங்கோவனை டெல்லிக்கு வரவழைத்து காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது காங்கிரஸ். ஆனால் வெறும் 8 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது.
இதனால் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக டெல்லி மேலிடத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் வேட்பாளர்களிடம் பணம் வசூல் செய்தார் இளங்கோவன் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் அடங்கும். இதனால் இளங்கோவன் மீது காங்கிரஸ் மேலிடம் அதிருப்தியைக் காட்டியது.

ராஜினாமா
டெல்லியிலேயே முகாமிட்டிருந்த இளங்கோவனை சோனியாவும் ராகுலும் சந்திக்கவும் மறுத்துவிட்டனர். இதனால் நொந்துபோன இளங்கோவன் தம்முடைய ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு தமிழகம் திரும்பினார். பின்னர் காங்கிரஸ் மேலிடமும் இதனை உறுதி செய்தது. இது இளங்கோவன் ஆதரவாளர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இளங்கோவன் ஆதரவாளர்கள் அதிருப்தி
இளங்கோவன் ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சித்தனர்; சிலர் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆனால் இதை முதலில் கண்டு கொள்ளாத காங்கிரஸ் மேலிடம் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தது.

புதிய தலைவர்கள் பட்டியல்...
புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக திருநாவுக்கரசர், ப.சிதம்பரம், குஷ்பு, விஜயதாரணி, வசந்தகுமார், செல்லகுமார், ஜெயகுமார், மாணிக் தாகூர், சுதர்சன நாச்சியப்பன், கராத்தே தியாகராஜன் என பலரையும் டெல்லிக்கு வரவழைத்து ஆலோசனை கேட்கப்பட்டது. ஒருகட்டத்தில் திருநாவுக்கரசர் அல்லது ப.சிதம்பரம் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. உடனே இளங்கோவன் ஆதரவாளர்கள் திருநாவுக்கரசர் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலர்கள் கூட்டாக டெல்லிக்கு கடிதம் அனுப்பி வைத்தனர்.

எப்படியும் குடைச்சல்தான்...
சிதம்பரத்தைப் பொறுத்தவரையில் தாம் தலைவராக விரும்பவில்லை; தம்முடைய ஆதரவாளர் கராத்தே தியாகராஜனுக்கு தலைவர் பதவி கொடுக்கலாம் என கூறியிருந்தார். இருப்பினும் யாரை தலைவராகப் போட்டாலும் மாவட்ட செயலர்கள் பெரும்பான்மையோர் இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்பதால் நிச்சயம் குடைச்சல் இருக்கும் என்றே தீவிரமாக யோசித்து வந்தது காங்கிரஸ் மேலிடம்.

இளங்கோவனுக்கு அழைப்பு
இப்படியே ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி காலியாகவே இருந்து வருகிறது. தற்போது உள்ளாட்சித் தேர்தலும் நெருங்கிவிட்டது. இனி புதிய தலைவர் ஒருவரைப் போட்டு இளங்கோவனைப் போல சமாளிக்க முடியுமா? எனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனால் இளங்கோவனை டெல்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மீண்டும் தலைவர்?
இளங்கோவன் தம்முடைய தடாலடிகள் மூலம் காங்கிரஸ் கட்சியை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கக் கூடியவர் என்பது யதார்த்தம். இதனால் இளங்கோவனை மீண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவித்துவிட்டு பஞ்சாயத்துகளுக்கு காங். மேலிடம் முற்றுப்புள்ளி வைக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications