ஜெயலலிதாவின் பெருந்தன்மை, இளங்கோவன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.. சரத்குமார்
சென்னை: அதிமுக தொண்டர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களின் நடவடிக்கைகள், பேச்சுக்கள், எழுத்துக்கள் மற்றவர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துக் காட்டாய், வழிகாட்டுதலாய், உதாரணமாய் திகழ வேண்டும்.
அந்த நெறியிலிருந்து மாறி ஈவிகேஎஸ் இளங்கோவனின் கண்டனத்துக்குரிய பேச்சு அமைந்து விட்டது. இருப்பினும் பெருந்தன்மையான உள்ளத்தோடு அதிமுக தொண்டர்கள் இளங்கோவனுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்களை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
இது முதல்வர் அவர்களின் மன்னிக்கும் குணத்தையும், பெருந்தன்மையையும் எடுத்துக் காட்டுகிறது. இதை உணர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.