இப்பவே மொட்டை போட்டுட்டார் பொன். ராதா.. இளங்கோவன் நக்கல்ஸ்!
வேலூர்: தமிழகத்தில் பா.ஜ.க. அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல் உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இப்போதே மொட்டை அடித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வுக்கு அனைத்து தொகுதிகளிலும் மொட்டைதான் கிடைக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
வேலூர் தொகுதிக்குட்பட்ட குடியாத்தத்தில் இளங்கோவன் பிரசாரம் செய்து பேசுகையில், நடைபெற்று வருகின்ற தேர்தல் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் அல்ல. இது தேசிய அளவிலான தேர்தல்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக காங்கிரசார் 75 ஆண்டுகள் போராடி உள்ளனர். இதற்காக பலர் சிறைகளுக்கு சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி இந்திய மக்களோடும், நாட்டோடும் பின்னிப் பிணைந்த ஒரு கட்சி. அந்த கட்சியை எந்த சக்தியாலும் நாட்டில் இருந்து வெளியேற்ற முடியாது.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தபோது, ஒரு விமானத்தையே மருத்துவமனையாக மாற்றி அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து காப்பாற்றியவர் இந்திரா காந்தி. மேலும், எம்.ஜி.ஆரை முதலமைச்சராக்கியது ராஜீவ்காந்தி. அப்படிப்பட்ட காங்கிரசை இந்தியாவை விட்டே தூக்கி எறிய வேண்டும் என ஜெயலலிதா பேசி வருகிறார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு 2 மணி நேர மின்வெட்டை கூறி ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. ஆனால், தற்போது தமிழ்நாட்டில் 10 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் தொழில் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க. அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல் உள்ளது. பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இப்போதே மொட்டை அடித்துள்ளார். தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.வுக்கு அனைத்து தொகுதிகளிலும் மொட்டைதான் கிடைக்கும். கருணாநிதிக்கு வயதாகி விட்டதால் மாறி, மாறி பேசி வருகிறார். அவரது குடும்பத்திற்குள்ளேயே பிரச்னை. தம்பி ஸ்டாலின் சூரியனுக்கு ஓட்டு கேட்டால், அண்ணன் அழகிரி ஓட்டு போடாதீர்கள் என பேசி வருகிறார்.
அதேபோல் விஜயகாந்த் தடுமாறி பேசுபவர். மோடியை, ஜாதி, மதத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியாருடன் ஒப்பிட்டு பேசி வருகிறார். மோடி ஒரு மதவாதி. அவருக்கே தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே, இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் 5 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மற்றும் அரக்கோணத்தில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார் இளங்கோவன்.