லலித் மோடி விவகாரத்தில் நாடே அதிர.. வாய்மூடிவு மவுனியாக மோடி: ஈ.வி.கே.எஸ். சாடல்
சென்னை: லண்டனில் தலைமறைவாக உள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் உதவிய விவகாரத்தில் நாடே அதிரும் வகையில் விவாதங்கள் நடைபெறும் போது பிரதமர் மோடி மவுனமாக இருப்பது ஏன்? என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
நாங்கள் ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி சாதனை படைத்துள்ளோம் என நரேந்திர மோடியும், பா.ஜ.க.வினரும் மார்தட்டி பேசி வந்தார்கள். ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீது 2004 முதல் 2008 வரை எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் எழுப்பப்படவில்லை என்பதை லாவகமாக மறைத்து பேசினார்கள். ஆனால் அவர்களது ஊழல் எதிர்ப்பு வேஷம் ஓராண்டு முடிந்தவுடனேயே கலைந்து போகிற அளவுக்கு மெகா ஊழல் முறைகேடுகள் பூகம்பமாக வெடித்திருக்கிறது.
ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மீது நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு அமலாக்கப்பிரிவு வழக்குகளில் விசாரணையை சந்திக்கிற நிலையில் 2010 ஆம் ஆண்டு இந்த நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்தார். இவரது பாஸ்போர்ட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் 2010 இல் ரத்து செய்தது. இதை எதிர்த்து லலித் மோடி டெல்லி நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
நிதியமைச்சகத்தின் அமலாக்கப் பிரிவு லலித் மோடி மீது 15 வழக்குகள் தொடுத்து ஏறத்தாழ ரூ.1200 கோடி வரி ஏய்ப்பு மோசடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிற நிலையில்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்ததாக கூறுகிறார்.

லலித் மோடி- சுஷ்மா குடும்ப உறவு
உண்மையிலேயே லலித் மோடிக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் இந்திய தூதரகத்தின் மூலமாகத் தான் செய்திருக்க வேண்டுமெயொழிய பிரிட்டன் தூதரக அதிகாரி மூலமாகவோ, தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மூலமாகவோ ஏன் செய்தார் என்பதற்கு உரிய விளக்கத்தை இதுவரை சுஷ்மா ஸ்வராஜ் வழங்கவில்லை. லலித் மோடியின் வழக்கறிஞரிடம் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பணியாற்றுகிற காரணத்தால்தான் இத்தகைய உதவிகள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுஷ்மா தப்ப முடியாது..
வெளியுறத்துறை அமைச்சகத்தின் சார்பாகத் தான் லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. இதன் மீதான மேல்முறையீட்டில் டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு லலித் மோடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்து 10 மாதங்களாகியும் ஏன் வெளியுறவுத்துறை அமைச்சகம் மேல்முறையீடு செய்யவில்லை என்பதற்கு உரிய விளக்கத்தை தராமல் சுஷ்மா ஸ்வராஜ் தப்ப முடியாது.

மிகப் பெரும் மோசடி
ஒருபக்கம் நிதியமைச்சகத்தின் அமலாக்கப் பிரிவு லலித் மோடி மீது நீலநிற நோட்டீஸ் வெளியிட்டு அவரை தேடுகிற நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னொருபக்கம் அதே குற்றவாளிக்கு பிரிட்டனில் இருந்து போர்ச்சுகல் நாடு செல்வதற்கு தற்காலிக பயண ஆவணத்தை வழங்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவி செய்திருக்கிறது. சுதந்திர இந்தியா காணாத மிகப்பெரிய மோசடி லலித் மோடி விஷயத்தில் சட்டவிரோதமாக நடைபெற்றிருக்கிறது.

வசுந்தரா ராஜே
இந்தப் பின்னணியில் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுக்கும், லலித் மோடிக்கும் இருக்கிற தொடர்புகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. ஆகஸ்ட் 2011 இல் வசுந்தரா ராஜே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க லலித் மோடிக்கு ஆதரவாக வழங்கிய சாட்சி ஆவணத்தின் நகல் ஊடகங்களாலே வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஆவணத்தின் மூலமாக நான் செய்கிற உதவி இந்திய அரசுக்கு தெரிவிக்கக் கூடாது என்று வசுந்தரா ராஜே அதில் கூறியிருக்கிறார். இது லலித் மோடியின் குற்றச்செயலுக்கு துணை போகிற மிகப்பெரிய குற்றமாகும். இதற்காக அவர்மீது கிரிமினல் வழக்கு தொடரலாம்.

பன்மடங்கு கொடுத்து வாங்கியது ஏன்?
வசுந்தரா ராஜேயின் மகனும், பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான துஷ்யந்த் சிங் நடத்துகிற நிறுவனத்திற்கு லலித் மோடியின் நிறுவனத்திலிருந்து ரூ.13 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியதற்காக செலுத்தப்பட்டிருக்கிறது. துஷ்யந்த் சிங் நடத்துகிற நிறுவனத்தின் ரூ.10 மதிப்புள்ள பங்குகளை ரூ.96,180 விலைக்கு பன்மடங்கு கொடுத்து ஏன் வாங்கப்பட்டது என்பதற்கு முதலமைச்சர் வசுந்தரா ராஜே பதில் சொல்ல வேண்டும். முதலமைச்சரின் மகனுக்கு லலித் மோடி இந்த தொகையை செலுத்துவதற்கு கைமாறாக பெறப்பட்டது என்ன? லலித் மோடிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் என்ன ?

வாய்மூடிவு மவுனி மோடி
இந்திய அரசால் சில ஆண்டுகளாக தேடப்படும் பொருளாதார மற்றும் தலைமறைவு குற்றவாளி ஒருவருக்கு பயண ஆவணங்களை பெற சுஷ்மா ஸ்வராஜூடன் சேர்ந்து உதவி செய்த வசுந்தரா ராஜேவும் குற்றச்செயலை செய்துள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 4 நாட்களாக ஊடகங்களே அதிருகிற வகையில் விவாதங்கள் நடைபெற்று வருகிற நிலையில் அடிக்கடி மனம் திறந்து பேசுவதாக சொல்லப்படுகிற நரேந்திரமோடி வாய்மூடி மௌனியாக இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ராஜினாமா கோரிக்கை
எனவே ராகுல்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் 'சொன்னதை செய்யாத பா.ஜ.க." என்கிற நடைபயண பிரச்சாரத்தில் லலித் மோடியின் குற்றங்களுக்கு துணைபோன வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை மக்களிடையே எழுப்ப வேண்டும். இதை ராகுல் காந்தியின் குரலாக நாம் அனைவருக்கும் உரத்தக் குரலில் ஒலிக்க வேண்டும். இப்பிரச்சாரத்தை வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் செய்வதே ராகுல்காந்திக்கு நாம் வழங்க இருக்கிற பிறந்தநாள் பரிசாகும்.
இவ்வாறு இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications