வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறது - ஈவிகேஎஸ்
ஈரோடு: வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறது. கூட்டணி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் விருப்பமாக இருக்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அவருடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவோடு நல்லவர்களுடைய ஆட்சி அமையும் என நம்புகிறேன்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடத்தான் விரும்புகிறது. கூட்டணி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், மதச்சார்பற்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிடவும் விருப்பமாக உள்ளோம். குறிப்பாக தி.மு.க., கம்யூனிஸ்டு, தே.மு.தி.க. ஆகியவற்றோடு கூட்டணி அமைத்து போட்டியிட விருப்பம் உள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இதனால், எந்த பயனும் ஏற்பட போவது இல்லை. எனவே இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமோ, மத்திய அமைச்சர்களிடமோ நேரில் சென்று வலியுறுத்த வேண்டும். மத்திய அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்று சொன்னார்கள். அது நடந்ததா? பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணமே செய்து வருகிறார். மக்கள் கூடிய விரைவில், அவரை இந்தியாவிற்கு திரும்பி வாருங்கள் என சொல்லும் நிலை உருவாகும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications