ஹெச். ராஜா தமிழகத்தில் நடமாடவே முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன் கடும் எச்சரிக்கை
எச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசுவதாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி: எச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசுவதாக தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்று எச்.ராஜா பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
துடுக்கான கருத்துகளை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா. அண்மையில் நிருபர்களை தேசத்துரோகி, என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெள்ளக்காரி, இத்தாலிக்காரி என வசை மாரி பொழிந்தார்.
இது தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் எச்.ராஜாவின் கொடும்பாவி தீ வைத்து எரிக்கப்பட்டது.
அய்யாக்கண்ணுவை ஒருகை பார்ப்பவர்
விவசாயிகள் குறித்தும் அவ்வப்போது சர்ச்சைக் கருத்துகளை கூறி வருபவர் எச்.ராஜா. குறிப்பாக டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணுவை உண்டு இல்லை என பார்ப்பவர்.
அப்சல் குருவுடன் தொடர்பு
தற்போது அய்யாக்கண்ணு மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். அதாவது, அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குரு குழுவுக்கும் என்ன தொடர்பு என்பதை தமிழக முதல்வர் உடனடியாக விசாரிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அய்யாக்கண்ணுவை கைது செய்து விசாரிக்க வேண்டிய முறைப்படி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
எச்.ராஜாவுக்கு நாவடக்கம் இல்லை
இது விவசாயிகள் மட்டுமின்றி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எச்.ராஜா நாவடக்கம் இல்லாமல் பேசி வருகிறார் என தெரிவித்தார். அவருக்கு நாவடக்கம் தேவை என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடமாட முடியாது
சோனியா காந்தி குறித்து தவறாக பேசிய அவர், தற்போது 40 நாட்களாக உயிரை பணயம் வைத்து போராட்டம் நடத்தி வந்த அய்யாக்கண்ணுவை தீவிரவாதியுடன் தொடர்பு படுத்தி பேசியுள்ளார். இதுபோல் எச்.ராஜா தொடர்நுது பேசினார் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என்றும் அவர் எச்சரித்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியது
ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவையும் பிரதமர் மோடியையும் இணைத்து ஆபாசமாக பேசினார். இதற்காக அவரது உருவபொம்மையும் எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.