பொய்வழக்கு போட்டு வீட்டை சூறையாடியதுடன் ரூ.83,000 பணத்தையும் 'சுட்ட' போலீஸ்...!
தூத்துக்குடி: பொய் வழக்கு போட்டு வீட்டை சூறையாடியதுடன், ரூ. 83,000 பணத்தையும் எடுத்துச் சென்று விட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வர்த்தகரெட்டிபட்டியை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மாரிமுத்து கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு:
நான் கடந்த 5.8.2013அன்று வாகைக்குளத்தில் இருந்து எனது ஊரான வர்த்தகரெட்டிப்பட்டிக்கு பைக்கில் சென்றேன். செல்லும் வழியில் என்னை வழிமறித்த ஹைவே பட்ரோல் சிறப்பு உதவி ஆய்வாளர் அருணாச்சலம் என் பையில் இருந்த பணம் ரூ.2ஆயிரத்தை பறித்துக்கொண்டார். நான் எவ்வளவோ கேட்டும் அவர் பணத்தை திருப்பி தரவில்லை.
இதுகுறித்து நான் தட்டப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் எனது புகாரை வாங்க மறுத்துவிட்டனர். இதனையடுத்து நான் இதுபற்றி எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே எனது மனைவிக்கும், பக்கத்து வீட்டு உறவுப்பெண்ணுக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறை மையமாக கொண்டு தட்டப்பாறை போலீசார் என் மீதும், எனது மனைவி, எனது அக்கா மீதும் பொய் வழக்கு போட்டனர்.
இந்த வழக்கில் நாங்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றபோதும், ஹைவே பட்ரோல் சிறப்பு உதவி ஆய்வாளர் அருணாச்சலத்திற்கு ஆதரவாக தட்டப்பாறை சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் எங்களை காவல் நிலையத்தில் கையெழுத்து போடவிடாமல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 12ம் தேதி எனது வீட்டிற்கு வந்த போலீசார் என் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.
மேலும், நான் லாரியை விற்று வைத்திருந்த பணம் ரூ-.83ஆயிரத்தையும் எடுத்து சென்று விட்டனர். என் மீது பொய்வழக்கு போட்டு எனது வீட்டில் இருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், ரூ.83ஆயிரத்தை எடுத்து சென்ற போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications