சிதம்பரத்தில் சிறுத்தைகளை அப்செட் ஆக்கிய புதிய பா.ம.க. வேட்பாளர்
சிதம்பரம்: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த மணிரத்னத்தை இழுத்துப் பிடித்து வந்து வேட்பாளராக்கியிருக்கிறது பா.ம.க. இதனால் இத்தொகுதியில் வெற்றி உறுதி என்று வலம் வந்த சிறுத்தைகளுக்கு சற்றே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரகாசி, திமுக அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் வள்ளல்பெருமான் போட்டியிடுகின்றனர்.
வள்ளல்பெருமானுக்கு சீட்
இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வள்ளல்பெருமான் அறிவிக்கப்பட்ட போதே தமது ஆதரவாளர்களை சென்னைக்கு வண்டியேற்றி அனுப்பி சத்தியமூர்த்தி பவனில் தீ குளிப்பு நாடகத்தை அரங்கேற்றியவர் மணிரத்னம்.
விடாத மணிரத்னம்..கண்டு கொள்ளாத காங்.
ஆனாலும் மணிரத்னத்தை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்வதாக இல்லை. கடந்த 5 ஆண்டுகாலமாக சிதம்பரம் தொகுதியை குறி வைத்து வேலைகளை செய்து வந்ததால் மணிரத்னம் உச்சகட்ட அதிருப்தியில் இருந்தார்.
புலம்பிய பா.ம.க.
அதே நேரத்தில் இத்தொகுதியில் நிறுத்தப்பட்ட பா.ம.க.வேட்பாளர் கோபாலகிருஷ்ணனால் திருமாவளவனை தோற்கடிக்க முடியாது என்பது பாமகவினருக்கு உறுத்தலாக இருந்தது. இந்த நேரத்தில்தான் மணிரத்னத்தை வளைக்க முடிவு செய்தது பா.ம.க.
பாமக வேட்பாளரான மணிரத்னம்
இதில் ரொம்ப குஷியான மணிரத்னம், உடனே காடுவெட்டி குருவை சந்தித்து பாமகவில் ஐக்கியமான கையோடு வேட்பாளராகவும் ஆனார். இந்த உற்சாகத்தில் தொகுதியில் தடபுடலாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மணிரத்னம்.
சிறுத்தைகள் அப்செட்
மணிரத்னம்தான் வேட்பாளர் என்ற பாமகவின் புதிய அறிவிப்பு சிறுத்தைகளை கொஞ்சம் அப்செட் ஆக்கிவிட்டாலும் எப்படியும் வெல்வோம் என்ற நம்பிக்கையோடு சுழலத் தொடங்கியிருக்கிறார்களாம் திருமாவின் தம்பிமார்கள்.