ஜெ. இறந்தது இரவு... ஆனால் மாலையே பதவியேற்பு பணிகள் நடந்தது ஏன்?.. ஆறுமுகசாமி ஆணையம் பரபரப்பு கேள்வி
சென்னை: ஜெயலலிதா இறப்பதற்கு முன்பே புதிய முதல்வர் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கினார்.
2016-ஆம் ஆண்டு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை இருமுறை சந்தித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தெரிவித்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவை ஆளுநர் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சர்ச்சை
இதனால் ஜெயலலிதாவை ஆளுநர் பார்த்தாரா இல்லையா என ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. இதுகுறித்து வித்யாசாகர் ராவின் முதன்மை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜரான அவர் அளித்த சில பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகம் மறுப்பு
அவர் கூறுகையில் 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாலையே வித்யாசாகர் ராவின் உத்தரவின் பேரில் புதிய முதல்வருக்கான பதவியேற்பு ஏற்பாடுகளை முடித்துவிட்டோம் என்று கூறியுள்ளார். 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துவிட்டது.
முரண்பட்ட தகவல்
அவர் அன்றைய தினம் இரவு 11.30 மணிக்குத்தான் இறந்தார் என நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் ஜெயலலிதா உயிரிழந்த நேரம் குறித்து ரமேஷ் சந்த் மீனா கூறியிருக்கும் தகவலில் முரண்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஜராகி விளக்கம்
ஜெயலலிதா இரவுதான் இறந்தார் என செய்தி வெளியான நிலையில் முன்கூட்டியே பதவியேற்புக்கான ஏற்பாடுகளை செய்தது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே அப்பல்லோ மருத்துவர்கள் ராஜ் பிரசன்னா, விக்னேஷ் ஆகியோரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.