பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும் வரைதான் அதிமுக ஆட்சி தொடரும்.. கே.என்.நேரு பரபரப்பு பேச்சு
தமிழக அரசை மத்திய அரசு வழக்கு போடுவதாக மிரட்டிதான் பல திட்டங்களை ஏற்க வைத்திருக்கிறது. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தால்தான் ஆட்சி இருக்கும் என்றும் மிரட்டியுள்ளது என்றார் கே.என்.நேரு.
திருச்சி: ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருக்கும்வரைதான் தமிழகத்து ஆட்சிக்கு மத்திய அரசால் அச்சுறுத்தல் இருக்காது என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
மொழிப் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் திமுக சார்பில் திருச்சி உறையூரில் முன்னாள் மாநகர துணை மேயர் மு.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் , வி.பி.ராஜன், தலைமைக் கழகப் பேச்சாளர் சிறப்புரையாற்றினர்.

நேரு பேச்சு
அப்போது தொண்டர்கள் மத்தியில் கே.என்.நேரு பேசியதாவது: மொழிப் போர் தியாகிகள் விழாவை நடத்தும் உரிமை திமுகவுக்கு மட்டுமே உண்டு. விழாவை நடத்துகிற பல பேருக்கு இதன் வரலாறு தெரியாது. நீட் தேர்வு, உதய், ஜிஎஸ்டி மசோதா உட்பட பல விஷயங்களை மாநில அரசு ஏற்றிருக்கிறது.

பெரும் வெற்றி
தமிழக அரசை மத்திய அரசு வழக்கு போடுவதாக மிரட்டிதான் பல திட்டங்களை ஏற்க வைத்திருக்கிறது. பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தால்தான் ஆட்சி இருக்கும் என்றும் மிரட்டியுள்ளது. இப்போது தேர்தல் நடந்தால் திமுகதான் ஆட்சியமைக்கும். அதுவும், 1971 ல் திமுக பெற்றது போல அதிக இடங்களில் வெற்றி பெறும். திமுகவை ஆட்சியில் அமர்த்துவது வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தின் சூளுரை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு தொடர்பில்லை
தலைமைக் கழக பேச்சாளர், வி.பி.ராஜன் பேசுகையில், மொழிப்போருக்கும் அதிமுகவுக்கும் என்ன தொடர்பு உள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையில், 2019ல் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சிடி விற்ற லேடி தமிழ்நாட்டின் முதல்வராகும் நிலைமை வந்துள்ளது. மொழிகாக்க பாடுபட்டவர் திமுக தலைவர். உயிர் நீத்த தோழர்கள் பலர் திமுகவைச் சேர்ந்தவர்கள். திமுகவுக்கு வீர வணக்க நாள் செலுத்த தகுதி உண்டு.

சசிகலாவுக்கு எதிர்ப்பு
முதல்வர் பன்னீர் செல்வம் இல்லை, அவர் பணிவு செல்வம். ஒருவர் டீ கடை வைத்து பிரதமர் ஆனார். இன்னொருவர் முதல்வர் ஆகிவிட்டார். ஜல்லிக்கட்டு விவகாரத்தை அதிமுக சரியாக கையாளவில்லை. உள்ளாட்சி தேர்தலில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும். தலைவர்கள் அதிமுகவில் பதவிக்காக உடனிருக்கின்றார்கள். ஆனால் அடிமட்ட தலைவர்கள் சசிகலாவை புறக்கணிக்கிறார்கள். இந்த நிலையை வைத்து பார்க்கும் திமுக வெற்றி பெறும் என்பது உறுதியாகிவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications