சசிகலா, தினகரனோட கூட்டு சேர்ந்து எடப்பாடியார் நாடகமாடுகிறார்... கே.பி.முனுசாமி பளார்!
சசிகலா கட்டுப்பாட்டில் தான் கட்சியும் பழனிசாமி ஆட்சியும் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை : சசிகலா மற்றும் தினகரன் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிமுக அம்மா அணியுடன் இனி பேச்சுவார்த்தை நடப்பது என்பது சாத்தியமே இல்லை என்று ஓ.பிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் அவரது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சில நாட்களுக்கு முன், அமைச்சர்கள் தனியாகவும், முதல்வருடன் ஆலோசனை நடத்தியும் தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தனர்.

தினகரன் கட்சியை விட்டு விலக்கி வைக்கப்பட்டு விட்டார் எனவே பேச்சுவார்த்தை வாருங்கள் என்று எங்கள் அணிக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக சசிகலாவையும், தினகரனையும் நீக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவேயில்லை.
சிறையில் இருந்து வந்த தினகரனை அதிமுக அம்மா அணியின் எம்.எல்.ஏ.க்கள் போட்டி போட்டு சந்தித்து செல்கின்றனர். அதில் சிலர் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்சிக்கின்றனர். தினகரனை சந்தித்த எம்.எல்.ஏ.,க்கள் மீது முதல்வர் பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலமே சசிகலா கட்டுப்பாட்டில் தான், கட்சியும் பழனிசாமி ஆட்சியும் இயங்குகிறது என்பது உறுதியாகி உள்ளது. இத்தகைய ஒரு சூழலில் பேச்சுவார்த்தை வார்த்தை நடத்துவதற்கு சாத்தியமே இல்லை, இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications