தஞ்சையில் பஞ்சாயத்து தலைவியின் கணவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!
தஞ்சாவூர்: முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.. சொத்துத்தகராறில் அவர் கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தஞ்சாவூர், அருளானந்தநகரை சேர்ந்தவர் சேகர் (55). நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்தின் முன்னாள் தலைவராகும். இவரது மனைவி கீதா. இவர் தற்போது நாஞ்சிக்கோட்டை பஞ்சாயத்து தலைவராக உள்ளார்.
சேகரின் அண்ணன் ராதாகிருஷ்ணன் இறந்து விட்டார். சேகரின் தம்பி பத்மநாபனின் மகன் கார்த்திக்குக்கு தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

நேற்று காலை திருமணவிழாவில் சமையல் செய்வதற்காக ஆட்களை சேகர் திருமணமண்டபத்திற்கு காரில் அழைத்து வந்தார். அதன்பின்னர் அவர் மீண்டும் காரில் ஏறுவதற்காக நடந்து வந்தார்.
அப்போது திருமண மண்டபத்தின் வளாகத்தில் மறைந்து இருந்த 2 மர்ம நபர்கள் சேகரை நோக்கி அரிவாள்களுடன் ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும் சேகர் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். ஆனால் மர்ம ஆசாமிகள் அவரை விரட்டிச்சென்று வெட்டினர். அவர்களிடமிருந்து எப்பிடயோ தப்பித்து ஓடியபோது, மேலும் 2 மர்ம ஆசாமிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டு வெட்டிக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் நான்கு பேரும் இரு பைக்குகளில் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த கொலை தொடர்பாக சேகரின் தம்பி பத்மநாபன் தஞ்சை நகர தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் சேகருக்கும், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கும் இடையே சொத்துப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்தது. இந்த முன்விரோதத்தில் ராதாகிருஷ்ணனின் மருமகன் பாலசுப்பிரமணியன், கூலிப்படையை ஏவி கொலை செய்து இருக்கலாம் என கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications