விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது- முத்தரசன் வலியுறுத்தல்
சென்னை: விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பில்லாமலாதாறு மின் கோபுரங்கள் அமைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம் கலிவந்தபட்டு முதல் ஒட்டியம்பாக்கம் வரையிலும் செல்லும் உயர் மின் அழுத்தப்பாதையில் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விவசாயிகள் பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம் கலிவந்தபட்டு முதல் ஒட்டியம்பாக்கம் வரையிலும் செல்லும் உயர் மின் அழுத்தப்பாதையில் மின் கோபுரங்கள் அமைக்க சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்கள் தேர்வு செய்துள்ளதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரவர்கத்தின் பிடிவாதம்
விவசாய நிலங்களுக்கு பாதிப்பு இல்லாமல் அரசுக்கு சொந்தமான நிலத்தில், குறைந்த செலவில் மின் கோபுரங்கள் அமைக்கும் வாய்ப்புள்ளதை பரிசீலிக்க மின்துறை அதிகாரவர்க்கம் வேண்டுமென்றே பிடிவாதமாக மறுத்து வருகிறது.

தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மின் வழித்தடம் அமைப்பது குறித்து அரசிடம் முறையாக அனுமதி பெறவில்லை எனக் கூறி பணிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் மின்கோபுரங்கள் அமைக்கும பணியை ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தின் சுயலாபத்திற்காக விவசாய நிலங்களில் அமைக்கப்படுவதை தமிழ அரசு அனுமதிக்கக் கூடாது.

விவசாயிகள் கொந்தளிப்பு
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விவசாயிகளிடமிருந்து வந்த விண்ணப்பத்தை கடந்த 13.06.2016 அன்று முதல்வருக்கும், மின்துறை அமைச்சருக்கும் அனுப்பி வைத்துள்ளோம். இதனிடையில் விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கையினை ரியல்எஸ்டேட் வியாபாரிகள் போராட்டமாக சித்தரித்திருப்பது இப்பகுதியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடமும் விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.

ஒப்பந்தக்காரரின் சதிச்செயல்
விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை திசைதிருப்பி அரசுக்கு தவறாக வழி காட்டும் மின்துறை, ஓப்பந்தக்காரர் சதிச் செயலை அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பில்லாமல், மின் கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications