பொருட்காட்சி அனுமதியில் முறைகேடு: நெல்லையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வ.உ.சி. பேத்தி விளக்கம்
நெல்லையில் தனியார் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிஆர்ஓ ஆறுமுகசெல்வி விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லை: நெல்லையில் தனியார் பொருட்காட்சிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியும், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. பேத்தியுமான ஆறுமுக செல்வி வாட்ஸ் அப் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிஆர்ஓ அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலராக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகசெல்வி. இவர் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் பேத்தி ஆவார். கடந்த ஜனவரி மாதம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பதவி உயர்வு பெற்றார். திருநெல்வேலி மாவட்டத்திலேயே பணிபுரியத் தொடங்கினார்.

இந்த நிலையில் தனியார் பொருள்காட்சிக்கு அனுமதியளித்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ. ஆறுமுகசெல்வி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் செவ்வாய்கிழமை பிறப்பித்தார்.
இந்த நிலையில் ஆறுமுகசெல்வி வாட்ஸ் அப் மூலம் விளக்கம் அளித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது: தென்காசியில் தனியார் பொருட்காட்சி நடத்த 3 லட்சம் பணம் பெற்றதாகவும், அதன் காரணமாக என்னை மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிடை நீக்கம் செய்ததாகவும், தவறான குற்றசாட்டை சில பத்திரிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு மாறான செய்தியாகும். மேலும் எனது பணியிடை நீக்க உத்தரவையும் கீழே சமர்ப்பித்துள்ளேன்.
புளியங்குடி மற்றும் ஆலங்குள்ததில் தனியார் பொருட்காட்சி நடத்த தனிச்சையாக வாய் மொழி உத்தரவு வழங்கியதாக கூறி மாவட்ட ஆட்சித் தலைவர் என்னை பணியிடை நீக்கம் செய்துள்ளார். ஆனால்
புளியங்குடி மற்றும் ஆலங்குளத்தில் பொருட்காட்சி நடத்த வாய்மொழி உத்தரவாக நான் எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் எனக்கான பணியிடை நீக்க உத்தரவு எனக்கு வழங்குவதற்கு முன்னால் மாவட்ட ஆட்சித் தலைவர் என்னிடம் தன்னிலை விளக்கம் கேட்டிருக்கலாம் அல்லது எங்கள் செய்தித் துறை செயலாளர் மற்றும் இயக்குநருக்கு புகார் தெரிவித்திருக்கலாம். புளியங்குடி மற்றும் ஆலங்குளம் இரு இடங்களிலும் பொருட்காட்சி நடத்த அனுமதி கேட்டு கோப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு அனுப்பப்பட்டது.
அதற்குள் புளியங்குடி மற்றும் ஆலங்குளத்தில் தீபாவளி பண்டிகை அன்று பொருட்காட்சி நடத்தப்பட்டது எனக்கு தெரியாது. மேலும் தீபாவளி மறுநாள் புளியங்குடி மற்றும் ஆலங்குளத்தில் பொருட்காட்சி நடத்த அனுமதி இல்லை என்றும் உடனடியாக நிறத்தவும் மாவட்ட ஆட்சித் தலைவர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்கள் அதுவரை புளியங்குடி மற்றும் ஆலங்குளத்தில் பொருட்காட்சி நடத்தப்பட்டது எனக்கு தெரியாது . இருந்த போதிலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கேற்ப பொருட்காட்சி உரிமையாளரிடம் உடனடியாக பொருட்காட்சியை நிறத்தும்படி தொலைபேசியில் தகவல் தெரிவித்தேன் .
தென்காசியில் அரசின் அனுமதியின்றி பொருட்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட விவரம் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு என் மூலம் தான் கொண்டு செல்லப் பட்டு, தென்காசி ஆர்டிஓ, தென்காசி காவல் ஆய்வாளர் மற்றும் தென்காசி ஆணையாளர் ஆகியோரல் தடுத்து நிறுத்தப்பட்டது. இது மாவட்ட ஆட்சியருக்கும் தெரியும் .
இந்நிலையில் புளியங்குடி மற்றும் ஆலங்குளத்தில் நான் தனிச்சையாக வாய் மொழி உத்தரவு வழங்கியதாக எனக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பணியிட நீக்க உத்தரவு வழங்கியுள்ளது எனக்கு மிகவும் மன அதிர்ச்சியையும் மன உலைச்சலையும் தந்துள்ளது என்பதை மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications