தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் மழை வெளுக்குமாம்... நல்ல செய்தி சொன்ன வானிலை!
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் இடி மின்னலுடன் கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: பருவமழை பொய்த்துப் போனதால் வறட்சி தாண்டவமாடும் நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் 2 தினங்களுக்கு கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் நல்ல செய்தி சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால் நீர் நிலைகள் வற்றிப்போனது. தண்ணீர் பிரச்சினையும் தாண்டவமாடுகிறது.
இந்த நிலையில் மார்ச் மாதம் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்யும் என்று வானியல் ஆய்வாளர்கள் கணித்தனர். காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையமும் கணித்திருந்தது. அதன்படி கடந்த 3 தினங்களாக தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் எதிர்பார்ப்பு
சென்னையில் நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக சாரலும் பெய்தது. ஆனால் சில மணிநேரங்களிலேயே வெயில் கொளுத்தியது. இன்று காலை முதலே வெயில் அதிகமாக உள்ளது. மழை வருமா? வராதா என்று எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர் சென்னைவாசிகள்.
காரைக்காலில் 17 செ.மீ மழை
சனிக்கிழமையன்று தமிழகத்தில் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக காரைக்காலில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் 8 செ.மீ மழையும், மயிலாடுதுறை, திருப்பத்தூர், பேரையூர், பரமக்குடியில் தலா 4 செ.மீ மழை அளவும் பதிவாகியுள்ளது. வத்திராயிருப்பு, உசிலம்பட்டி, திருக்கோவிலூர் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
பூமியை நனைத்த மழை
நன்னிலம், கமுதி, ஆடுதுறை, திருத்தணி, திண்டிவனம், ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 2 செ.மீ. மழையும் தரங்கம்பாடி, கொடைக்கானல், திருமங்கலம், திருவிடைமருதூர், மதுக்கூர், பொள்ளாச்சி, பெரியகுளம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, உத்தமபாளையம், அதிராம்பட்டினம், ஆண்டிப்பட்டி, விளாத்திக்குளம், குடவாசல், வால்பாறை, தேவகோட்டை, நடுவட்டம் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று பொதுமக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கனமழைக்கு வாய்ப்பு
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசும். சில இடங்களில் லேசான மழை பெய்யும். கேரளா மற்றும் அதை ஒட்டிய தமிழக எல்லையில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் கோடை காலம் மார்ச் 1ந்தேதி தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். குமரிக்கடல் முதல் தமிழகத்தின் வழியாக மத்தியபிரதேசம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இது அடுத்து 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றார்.
கோடை மழை நீடிக்கும்
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் இன்றும் செவ்வாய்கிழமையும் சில இடங்களில் மழை பெய்யும். அதாவது லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். இது கோடைமழை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.