எழும்பூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு கண்பார்வை பரிசோதனை
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அவர் புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அச்சிகிச்சையின் ஒரு கட்டமாக அவருக்கு கண் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
சிறுநீர் தொற்று பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க வேலூரில் போதிய வசதிகள் இல்லை என்றும் எனவே சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று அரசுக்கு பேரறிவாளன் மனு அளித்தார். இதையடுத்து சென்னையில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக வேலூர் சிறையில் இருந்து பேரறிவாளன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவ குழுவினர் உடல் பரிசோதனை நடத்தினர். அப்போது, அவரது ரத்தம், சிறுநீர் ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைக்கு பின்பு சிறைக்கு திரும்பினார்.
இந்த நிலையில் பேரறிவாளனுக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனைக்கு போலீசார் இன்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து அனுமதித்தனர். அங்கு பேரறிவாளனுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.