மண்டய உடைச்சி.. எலும்ப முறிச்சி.. அப்படி என்ன பண்ணோம்.. உண்மையறியும் குழுவிடம் குமுறும் மீனவ மக்கள்
சென்னை திருவல்லிக்கேணி நடுகுப்பம் மீன் மார்க்கெட் அருகில் இருந்த பலரது மண்டையை உடைத்து, எலும்பை போலீசார் முறித்துள்ளனர் என்று உண்மையறியும் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் முறையிட்டு கதறினர்.
சென்னை: மெரினா கடற்கரையின் அருகில் இருந்த நடுகுப்பத்தில் நேற்று அதிக அளவில் போலீசார் குவிந்து வன்முறையில் ஈடுபட்டதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வீட்டில் இருந்தவர்களை கூட தர தரவென இழுத்து வந்து அடித்து துவைத்துள்ளனர் போலீசார் என்று உண்மை அறியும் குழுவிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினார்கள்.
சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் போலீசாரே குடிசை மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்து அத்துமீறியுள்ளனர் என்பது வீடியோ பதிவுகளாக வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையில் பேராசியர் சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர் நடு குப்பம் மீன்மார்க்கெட் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் உண்மைகளை கேட்டு அறிந்தனர்.

கெஞ்சிய பெண்கள்
உண்மை அறியும் குழுவிடம் "என் மகனை மேலிருந்து தரதரவென இழுந்து வந்தனர். இங்கிருக்கும் பெண்கள் எல்லாம் போலீசாரிடம் போய் அந்த பையன் தப்பு செய்யும் பையன் இல்லை. அவனை விட்டுவிடுங்கள் என்று பெண்கள் கெஞ்சினார்கள். அவர்களையும் போலீசார் விட்டு வைக்காமல் அடித்து உதைத்தனர். நடுரோட்டில் அடித்தது போதாது என்று அவனை இழுத்து கொண்டு போய் அருகில் உள்ள லேடி விலிங்டன் பள்ளியில் வைத்து அடி அடி என்று அடித்துள்ளனர்" என்று கதறியபடி பாதிக்கப்பட்ட பெண் பொன்னி கூறினார்.

மகன் எங்கே?
இந்தக் கலவரத்தில் காணாமல் போன மகனை எங்கெங்கோ சென்று தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. எனக்கு உடம்பு சரியில்லை. அடிக்கடி வலிப்பு நோய் வரும். என்னால் அவனை எங்கும் தேட முடியாமல் மயங்கிவிட்டேன். இதோ நான் வைத்திருக்கும் இந்த பை முழுக்க நான் தினமும் சாப்பிடும் மாத்திரைகள்தான் உள்ளது என்று பாதிக்க பெண் குமுறினார்.

உருகுலைந்த முகம்
ராஜேஷ் என்பவர் காலையில் காணாமல் போன பிறகு இரவு 7 மணிக்கு மேல் அவரே தன் தாய்க்கு போன் செய்து பேசியுள்ளர். பின்னர் அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தால், அவரின் மண்டை உடைந்து, எலும்புகள் முறிந்து எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்திருக்கிறார். அவரது தாய் பொன்னி ராஜேஷை பார்க்கும் போது அடையாளமே தெரியாத அளவிற்கு முகம் உருகுலைந்திருப்பதாக கூறினார்.

சிகிச்சை
அப்படியே ராயப்பேட்டை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லப்பட்ட ராஜேஷ், அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே போன்று இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீட்டிலும் அடி உதை வாங்காத ஆண்கள் மற்றும் பெண்களே இல்லை என்ற நிலைதான் நடுகுப்பத்தில் காணப்படுகிறது.












Click it and Unblock the Notifications