குடும்ப பிரச்சினை.. முன்னாள் ராணுவ வீரர் மீது கொதிக்க, கொதிக்க சுடு தண்ணீரை ஊற்றிய மனைவி!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்பத் தகராறு ஏற்பட்டதால் வெந்நீரை எடுத்து கணவன் மீது மனைவி ஊற்றியதால் தீக்காயமடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி: கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது ஏற்பட்டு வந்த குடும்பத் தகராறால் ஆத்திரமடைந்த மனைவி, கணவன் மீது வெந்நீரை எடுத்து ஊற்றியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருபரப்பள்ளி அருகே உள்ள பாஞ்சாலிநகரை சேர்ந்தவர் பழனி (45) முன்னாள் ராணுவவீரர். இவருடைய மனைவி மலர்கொடி(34). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம்.
கடந்த 19-ம் தேதியும் இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மலர்கொடி அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து பழனி மீது ஊற்றினாராம்.
இதில் வயிறு மற்றும் கைகளில் கொப்பளம் அடைந்த பழனியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பழனி கொடுத்த புகாரின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.