மனைவி டெய்லி மது அருந்துகிறார், நிம்மதியே இல்லை.. எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புலம்பிய விவசாயி
தேனி: எனது மனைவி தினசரி மது அருந்துகிறார். என்னுடன் தகராறு செய்கிறார். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்று தேனியில் ஒரு விவசாயி பத்திரிகையாளர்களிடம் புலம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி அருகே உள்ள மாரியம்மன்கோயில்பட்டியைச் சேர்ந்தவர் அந்த விவசாயி. இவரது ஊர் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தொகுதியான போடிநாயக்கனூருக்கு உட்பட்டதாகும்.
நேற்று இந்த விவசாயி எஸ்.பி. அலுவலகத்திற்கு கையில் மனுவுடன் வந்தார். உள்ளே வந்த அவர் அங்கு நின்றிருந்த செய்தியாளர்களை மப்டி போலீஸார் என்று நினைத்து நான் புகார் தர வேண்டும் என்று கூறியுள்ளார். பத்திரிகையார்களும் என்ன புகார் என்று கேட்டு புகாரை வாங்கிப் படித்துள்ளனர்.
அந்த மனுவில், எனது மனைவி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். தினசரி இரவு மது அருந்துகிறார். குடும்பத்தில் நிம்மதியே இல்லை. போலீசார் எனது மனைவியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதையடுத்து இந்த மனுவை உள்ளே உள்ள போலீஸாரிடம் கொடுங்கள் என்று பத்திரிகையாளர்கள் அறிவுறுத்தினர். ஆனால் திடீரென மனம் மாறிய அந்த விவசாயி, நான் புகார் கொடுக்கப் போவதில்லை. தயவு செய்து இந்த செய்தியைப் போடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டு கிளம்பிச் சென்று விட்டார்.