பயிர்கள் கருகிய சோகத்தில்.. திருச்சி விவசாயி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் துயரம்
பயிர்கள் கருகிய சோகத்தில் திருச்சி விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொங்கல் திருவிழா நெருங்கிய நிலையில் விவசாயிகளின் துயரம் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
திருச்சி: தொடரும் துயரமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இன்றும் திருச்சி விவசாயி ஒருவர் வயலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவிரியில் இருந்து நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் வறட்சி பூமியாகிவிட்டது. இதனால், நெல், கருப்பு, வாழை, சோளம், மஞ்சள் என அனைத்துப் பயிர்களும் கருகி நாசமடைந்துவிட்டன.

பயிர்கள் கருகியதைக் கண்ட அதிர்ச்சியில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பல்லாவரத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பயிர்கள் கருகியதால் மனமுடைந்த பழனிச்சாமி, வயலுக்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொங்கல் திருவிழா கொண்டாடும் தருணத்தில் விவசாயிகளின் வீடுகள் இழவு வீடுகளாக காட்சி அளிப்பதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications