கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை ?
திருத்துறைப்பூண்டியில் நேரடி நெல் விதைப்பு முளைக்காததால் வேதனையில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே கடன் வாங்கி விதைத்த நெல் முளைக்காததால் மனமுடைந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ். இவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நேரடி சம்பா சாகுபடி விவசாயத்தை மேற்கொண்டுள்ளார். போதிய மழை மற்றும் விவசாயத்திற்கு தேவையான அளவில் தண்ணீர் இந்தாண்டு வராமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பயிர்கள் கருகி சுமார் 4 ஏக்கர் நிலமும் முற்றிலும் பாதிப்பிற்குள்ளானது. இதனால் கடந்த சில நாட்களாக என்ன செய்வதென்று தெரியாமல் வேதனையில் தவித்துள்ளார் கோவிந்தராஜ். வங்கியில் வாங்கிய கடனை எப்படி திருப்பி அடைப்பது என்ற சோகமும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இதனால் விரக்தி அடைந்த கோவிந்தராஜ் கடந்த 1ம் தேதி வயல் அருகே விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
பயிர்கள் வாடியதால் வங்கியில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இது சந்தேக மரணம் என காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. அவரின் இறப்பு தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் விளக்கமளித்துள்ளனர்.