கூட்டுறவு வங்கிகளில் கடன் தள்ளுபடி.. வரவேற்று நாகை, தஞ்சை விவசாயிகள் ஒன் இந்தியாவிற்கு பேட்டி
தஞ்சை: கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி ரூபாய் பயிர்கடன் தள்ளுபடி செய்த முதல்வரின் அறிவிப்புக்கு தமிழகம் முழுவதும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video
கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்றுள்ள 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி ரூபாய் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
அறிவித்துள்ளார்.
இதற்கு நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதியில் உள்ள விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஒன் இந்தியாவுக்கு அவர்கள் பேட்டி அளித்துள்ளனர்.
தஞ்சை டெல்டா விவசாயிகள்
தஞ்சை டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஜேகே ரவிச்சந்திரன் கூறுகையில், "உழைத்து, உழைத்து ஓடாய் போன தமிழகத்தின் அத்தனை விவசாயிகளுக்கும், ராமன் காலடி பட்டு எப்படி அகழி உயிர்பித்தாலோ அதுபோல, எங்களை காப்பாற்றும் முதல்வராக, இன்றைக்கு அனைத்து கூட்டுறவு கடன்களையும் ரத்து செய்துள்ளார்.
பச்சை விவசாயி
தொடர்ந்த தன்னை பச்சை துண்டுபோட்ட விவசாயியாக அல்லாமல், பச்சை விவசாயி என்ற நிரூபிக்கிறார். காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவித்தார். இந்த நிலையிலேயே கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை ரத்து செய்து விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்துள்ளார். தொடர்ந்து அம்மாவின் ஆட்சி என்று சொல்கிற முதல்வர், எங்களுடைய விவசாயிகளின் வாழ்வை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அத்தகைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தஞ்சை விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
தஞ்சை விவசாயிகள்
தஞ்சை காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலர் சுவாமிமலை விமல்நாதன் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி தஞ்சாவூர் வந்திருந்த போது, விவசாய பெருமக்களை சந்தித்தார். அன்றைக்கு நாங்கள் வைத்த முக்கியமான கோரிக்கைகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதும் ஒன்று.
அனைவருக்கும் தள்ளுபடி
எங்கள் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து சட்டப்பேரவையிலே விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு செய்திருக்கிறது. இதற்காக காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாக, நமது முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்படுள்ளோம். விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பை சிறு,குறு, பெரு விவசாயிகள் என்று பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இதேபோல் தேசிய வங்கிகளில் வாங்கிய கடனுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.