காய்ந்த பயிர்களை கையில் ஏந்தி மத்திய குழுவை முற்றுகையிட்ட விவசாயிகள்.. பரபரப்பு
பெரம்பலூரில் மத்திய அரசின் குழுவை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்: பெரம்பலூரில் வறட்சி பாதித்தப் பகுதிகளை ஆய்வு செய்ய வந்த மத்திய அரசின் குழுவை விவசாயிகள் முற்றுகையிட்டனர். கைகளில் காய்ந்தப் பயிர்களை ஏந்தியபடி மத்திய குழுவை முற்றுகையிட்ட விவசாயிகள் நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தமிழகத்தில் பருவமழை முறையாக பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர்.

இதுவரை தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக்குழுவை அனுப்ப வேண்டும் என பிரதமருக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து கடந்த 22ஆம் தேதி 9 பேர் கொண்ட மத்தியக் குழு தமிழகம் வந்தது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்தக்குழுவினர் 4 குழுக்களாகப் பிரிந்து ஆய்வு செய்மு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று பெரம்பலூரில் ஆய்வு செய்ய சென்ற மத்தியக் குழு அதிகாரிகளை அப்பகுதி விவசாயிகள் காய்ந்த பயிர்களுடன் முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண தொகையை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்தியக்குழுவினரிடன் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்குமாறு விவசாயிகள் கண்ணீர்விட்டனர். இதனிடையே ஆய்வு முடிந்த ஒருவாரத்துக்குள் வறட்சிக் குறித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு குழுவினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications