கும்மியடித்து.. ஆடிப் பாடி விதைத்து... மழைக்காக வருண பகவானிடம் நூதன வேண்டுதல்
கோவி்ல்பட்டி: கோவில்பட்டி அருகே புது அப்பனேரியில் மழை வேண்டி முளை பிடித்த தானியங்களை விவசாயிகள், பெண்கள் கும்மியடித்து, ஆடிப்பாடி நிலங்களில் விதைத்து நூதனமான முறையில் வேண்டினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டரா பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் மழையை நம்பியே விவசாய பணிகள் நடைபெறும். பொதுவாகவே கோவில்பட்டி பகுதிகளில் அதிகளவில் வெயில் கொளுத்தும். மேலும் அந்த பகுதி கந்தக பூமி ஆகும்.
தீப்பெட்டி, பட்டாசு போன்ற பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும். இந்த பகுதிகளில் கோடை காலங்களில் நடமாடவே முடியாத அளவுக்கு வெப்பம் மிகுந்து காணப்படும்.
அப்படிப்பட்ட இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வி்ட்டது. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார விவசாய விளை நிலங்கள் விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக கீழே சென்று விட்டது.
இதனால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் காணப்படுகிறது. விவசாயிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையை எதிர்பார்த்து நிலத்தை பண்படுத்தி வந்தனர். இதில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மழை பெய்ய வேண்டி பூஜைகள், யாகங்கள் அங்கங்கே நடந்து வருகிறது.
இந்நிலையில் மழை வேண்டி கோவில்பட்டி அருகே புதுஅப்பனேரி கிராமத்தில் நூதன வழிபாடு நடந்தது. புதுஅப்பனேரியில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் விவசாயிகள் முளை கட்டிய தானியங்களை விளை நிலங்களில் விதைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் போது கிராம மக்கள் மழை பெய்ய வேண்டி கும்மியாட்டம், கோலாட்டத்துடன் கிராமப்புற பாடல்களை பாடியபடி சென்றனர். இதையடுத்து கிராமத்திற்கு அருகே உள்ள வயலில் முளையிட்ட தானியங்களை விவசாயிகள் விதைத்தனர். பின்னர் வருண பகவானை வேண்டி வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications