சென்னையில் தொடரும் திருச்சி விவசாயிகள் போராட்டம்... மெரீனாவில் தற்கொலைக்கு முயற்சி!
சென்னை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரியும், நதி நீர் இணைப்பை வலியுறுத்தியும், நிலம் கையகப் படுத்துதல் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் திருச்சியைச் சேர்ந்த விவசாயிகள் இன்றும் சென்னையில் போராட்டம் நடத்திக் கைதானார்கள்.
மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்திய அவர்களை போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
விவசாயிகளின் இந்த மெரீனா கடல் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டையை முற்றுகையிட...
திருச்சியை சேர்ந்த விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் நேற்று கோட்டையை முற்றுகையிட முயன்று எம்.ஜி.ஆர். சமாதி அருகே கைதானார்கள்.

2வது நாளாக...
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரியும், நதிநீரை இணைக்க கோரியும், நிலம் கையகப் படுத்துதல் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் இன்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மனித சங்கிலி...
இன்று அனைவரும் சென்னை மெரீனா கடற்கரைக்கு வந்தனர். அங்கு கடலில் மனிதச் சங்கிலி போல முதலில் கை கோர்த்து நின்றனர்.

தற்கொலைப் போராட்டம்...
பின்னர் அவர்கள் மெரீனா கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

கைது...
இதையடுத்து தற்கொலை போராட்டத்தில் ஈடுபட முயன்ற 29 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அனைவரையும் அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தி பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள சமூகநலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பிரதமர் வீடு முற்றுகை...
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக பிரதமர் நரேந்திரமோடியின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று போராட்டக்குழு அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications