தஞ்சையில் தனியார் வங்கிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள்
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விவசாயி பாலன் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோடக் மகேந்திரா வங்கிக்கு விவசாயிகள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாலன்(40). விவசாயி. இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று விவசாய பணிகளுக்காக டிராக்டர் வாங்கினார். கடன் தொகையை பாலன் சரியாக செலுத்தவில்லை என்பதால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் நீதிமன்றம் மூலமாக நடவடிக்கை மேற்கொண்டு டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுபடி டிராக்டரை பறிமுதல் செய்ய பாப்பாநாடு காவலர்கள் குமாரவேல், ராஜா, போலீஸ்காரர் ஏசுராஜ், இளவழகன் ஆகியோர் சோழகன் குடிகாடு சென்று பாலனை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ வாட்ஸ் அப்பில் பரவியது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து மாவட்டம் முழுவதும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய 3 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வங்கியின் செயலை கண்டித்து தஞ்சை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள கோடக் மகேந்திரா வங்கியின் கிளை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர் வங்கியை பூட்டிவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாதிப்படைந்த விவசாயி பாலனுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகம் சென்று உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications