மேட்டூர் அணையில் நீரை திறக்க வலியுறுத்தி கல்லணையில் இறங்கி போராடிய விவசாயிகள் கைது
கல்லணையில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video
திருச்சி: குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கல்லணையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூர் அணை கட்டப்பட்டு 85-வது ஆண்டு ஆகிறது. பொதுவாக ஜூன் 12-ந்தேதியன்று மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க முடியாது என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க கோரியும் கல்லணையில் இறங்கி விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தில் புரட்சிகர விவசாய சங்கத்தினரும் இணைந்து கரம் கோர்த்து கோரிக்கை குறித்து குரல் கொடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், புரட்சிகர விவசாய சங்கத்தினரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.