காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு... திமுக உண்ணாவிரதத்திற்கு விவசாயிகள் ஆதரவு!
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சாவூரின் வரும் 7ம் தேதி திமுக நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் அதனை செய்ய மறுத்துள்ளது பாஜக தலைமையிலான மத்திய அரசு. இதனை கண்டிக்கும் வகையில் திமுக பொருளாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் வரும் 7ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட திமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர். இந்தப் போராட்டத்தில் தமிழக விவசாயிகளின் சங்கம் பங்கேற்கும் என்று அதன் துணைத் தலைவர் சுகுமாரன் தஞ்சையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.